லண்டனில் இருந்து திரும்பும் ஸ்டாலின்! கையில் இருக்கும் மெகா சைஸ் ரிப்போர்ட்.. மொத்தமா பிளாக் லிஸ்ட்
சென்னை: நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், தமிழக அரசியல் களத்தில் மட்டுமன்றி, எதிர்க்கட்சியான திமுகவிற்குள்ளும் மிகப்பெரிய புயலை கிளப்பியுள்ளது. கட்சியில் பல அதிரடி மாற்றங்களை செய்ய லண்டனில் இருந்து திரும்பும் திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம்.
எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாதது ஏன் என்பது குறித்தும், கட்சியின் தோல்விக்கான பின்னணி குறித்தும் ஆராய திமுக தலைமை கடந்த சில நாட்களுக்கு முன் அதிரடியாகக் களத்தில் இறங்கியது. இதற்காக அமைக்கப்பட்ட 36 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு தங்களது விரிவான மற்றும் கள ஆய்வு அறிக்கையை கட்சியின் தலைமைக்கு அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பித்துள்ளது.

இந்த அறிக்கையில் உள்ள விவரங்கள் தற்போதைய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது என்றே கூறலாம்.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், லண்டன் சென்றிருந்த மு.க.ஸ்டாலின், இன்று மாலை துபாய் வழியாக சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேர்கிறார். விமான நிலையத்தில் அவருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, தலைமை நிலையச் செயலாளர் அன்பகம் கலை உள்பட முக்கிய திமுக நிர்வாகிகள் பலர் நேரில் வந்து அவரை வரவேற்க உள்ளனர். அவரை வரவேற்பதற்காக 500க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் அதிகாலையிலேயே விமான நிலையத்திற்கு வர உள்ளனர்அ சம்பாவிதங்களைத் தவிர்க்க மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (CISF) மற்றும் தமிழக போலீஸார் இணைந்து போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பணிகளை செய்ய உள்ளனர்.
தற்போது சென்னை அறிவாலய வட்டாரங்களில் இந்த 'உண்மை கண்டறியும் குழு' கொடுத்த அறிக்கைதான் மிக முக்கியமான ஹாட் டாபிக் ஆக ஓடிக்கொண்டிருக்கிறது. 36 பேர் கொண்ட இந்தக் குழுவினர் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளுக்கும் ரகசியமாகவும், நேரடியாகவும் சென்று தொண்டர்களிடமும், கீழ்மட்ட நிர்வாகிகளிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி இந்த ரகசிய அறிக்கையைத் தயார் செய்துள்ளனர்.
அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள பல அதிர்ச்சித் தகவல்கள் திமுக தலைமையையே உலுக்கியுள்ளதாக அறிவாலய மூத்த நிர்வாகிகள் முணுமுணுக்கிறார்கள். பல மாவட்டங்களில், பல ஆண்டுகளாகக் கட்சியில் உச்சகட்ட பதவிகளையும், அரசு சலுகைகளையும் அனுபவித்த மாவட்டச் செயலாளர்களும், முக்கிய தலைவர்களும் கட்சிக்கு உண்மையாக உழைக்காமல் 'முதுகில் குத்திய' விவகாரங்கள் தகுந்த ஆதாரங்களுடன், ஆடியோ மற்றும் வீடியோ சாட்சியங்களுடன் பட்டியலிடப்பட்டுள்ளன.
குறிப்பாக, திமுக மிக எளிதாக வெல்லும் என்று கணிக்கப்பட்ட பல விஐபி தொகுதிகளில், உள்ளூர் திமுக நிர்வாகிகள் மற்ற கட்சியினருடன் ரகசிய உடன்பாடு வைத்துக்கொண்டு செயல்பட்டது தற்போதைய விசாரணையில் அம்பலமாகியுள்ளது. திமுக வேட்பாளர்களைத் தோற்கடிப்பதற்காகவே, உள்ளூர் நிர்வாகிகள் திட்டமிட்டு வேலை செய்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கெல்லாம் மேலாக, தேர்தல் பணிகளுக்காகத் தலைமை அனுப்பிய தாராளமான தேர்தல் நிதியை, முறையாகக் கீழ்மட்டத் தொண்டர்களுக்கும், பூத் கமிட்டி பணிகளுக்கும் கொண்டு சேர்க்காமல், முக்கிய நிர்வாகிகள் பலரும் தங்களது சொந்தப் பைகளுக்குள் சுருட்டிய அதிர்ச்சிப் புகாரும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சொந்தக் கட்சி வேட்பாளரைத் தோற்கடிக்கத் தங்களுக்கு நெருக்கமானவர்களை வைத்து உள்ளடி வேலைகளில் ஈடுபட்டது, கூட்டணி கட்சிகளுடன் எந்தவித ஒருங்கிணைப்பும் இல்லாமல் தன்னிச்சையாகச் செயல்பட்டது என அடுக்கடுக்கான புகார்கள் அந்த அறிக்கையில் பக்க வாரியாக விவரிக்கப்பட்டுள்ளன.
வெளிநாடு செல்வதற்கு முன்பே இந்த அறிக்கையின் சில பகுதிகளைப் படித்துப் பார்த்த தலைமை, துரோகம் செய்தவர்கள் மீது கடும் கோபத்தில் இருப்பதாகத் தெரிகிறது. தற்போது சென்னை திரும்பியுள்ள மு.க.ஸ்டாலின், அறிக்கை முழுவதையும் ஆய்வு செய்துவிட்டு திமுகவில் பெரும் களை எடுப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இணைந்து ஒரு மாஸ்டர் பிளான் தீட்டியுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்களின் பதவிகளைப் பறிப்பது, கட்சிப் பொறுப்புகளில் இருந்து நிரந்தரமாக நீக்குவது எனப் பிளாக் லிஸ்ட் பட்டியல் தயாராகிவிட்டதாம். இதனால் கட்சியின் சீனியர் நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் பெரும் படபடப்பு தொற்றிக்கொண்டுள்ளது. அடுத்த சில நாட்களில் திமுகவில் அதிரடி மாற்றங்கள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.














Click it and Unblock the Notifications