அதிமுக கூட்டணி: தேசிய லீக் உடைந்தது
சென்னை: அதிமுகவுடன் இந்திய தேசிய லீக் கூட்டணி தொடர்வாத அக் கட்சியின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பசீர் அகமது கூறியுள்ளார். இதன்மூலம் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் விஷயத்தில் அந்தக் கட்சி இரண்டாக உடைந்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பாஜகவுடன் நெருங்கி சென்று கொண்டிருப்பதால் இந்திய தேசிய லீக் கட்சி, அதிமுகவுடன் கொண்டிருந்த உறவை முறித்துக் கொண்டு விட்டதாக அக்கட்சியின் அகில இந்திய தலைவர் முகமது சுலைமான் நேற்று அறிவித்தார்.
மேலும் இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழ் மாநில அமைப்பை கூண்டோடு கலைத்தார். தலைவராக இருந்த பஷீர் அகமது, பொதுச் செயலாளர் அப்துல் காதர், பொருளாளர் ஜவஹர் அலி ஆகியோரை கட்சியை விட்டு நீக்கினார்.
இந் நிலையில் பசீர் அகமது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
இந்திய தேசிய லீக் கட்சி அதிமுகவுடன் நல்லதொரு உறவைக் கொண்டுள்ளது. இந்த கூட்டணியை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக கட்சியிலிருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ள முன்னாள் அகில இந்திய தலைவர் சுலைமான் அதிமுகவுடன் இந்திய தேசிய லீக் உறவு இல்லை எனக் கூறி வருகிறார்.
சுலைமான் மற்றும் அவரது தரப்பினருக்கும் இந்திய தேசிய லீக்கிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுகவுடன் சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் நட்பும், ஆதரவும் இந்திய தேசிய லீக்கின் கூட்டணியும் தொடர்கிறது என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, இந்திய தேசிய லீக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சர்வார் கான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட சுலைமான் கட்சியிலிருந்து 3 வருடங்களுக்கு நீக்கி வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. பசீர் அகமது புதுச்சேரியில் கடந்த டிசம்பர் மாதம் 2ம் தேதியன்று கூடிய அகில இந்திய கட்சி கூட்டத்தில் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளார்.