மோடியின் அநியாயங்களை மூடிமறைக்க முடியாது - வாசன்
சென்னை: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் அநியாயங்களை மூடி மறைக்க இயலாது என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் காங்கிரஸ் சார்பில் நடந்த விழாவில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பொறுப்பை ஏற்று 4 ஆண்டுகள் ஆகிறது. இக்கால கட்டத்தில் எண்ணற்ற சாதனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றை மக்களிடம் விளக்க வேண்டியது அவசியமாகும்.
தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இந்த பணியில் ஈடுபடுவார்கள். அரசின் சாதனைகள் பற்றி மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும்.
மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசு சிறப்பான ஒத்துழைப்பு நல்கி வருகிறது. அரசின் திட்டங்கள் அனைத்தும் கூட்டணி கட்சிகளை கலந்து பேசித்தான் நிறைவேற்றப்படுகின்றன.
ஓரிரு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதால் மத்தியில் ஆட்சியை அந்த கட்சி பிடிக்கும் என்பது தவறான கணிப்பு. பாஜக வெற்றி பெற்றதன் மூலம் நரேந்திர மோடியின் அநியாயங்களை மூடி மறைக்க இயலாது என்றார் அவர்.