புதிய சாலைகள் போட - பாலம் கட்ட ரூ. 222 கோடி ஒதுக்கீடு
சென்னை: தமிழகத்தில் 358 பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன்களில் 910 கிலோமீட்டர் தொலைவுக்கு கிராம சாலைகள் போடவும், 49 பாலங்களைக் கட்டவும் ரூ. 222 கோடி நிதியை முதல்வர் கருணாநிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் 219 கிராமப்புற சாலைகளும், 32 பாலங்களும் அமைக்கப்படும்.
இந்த சாலைத் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் பஸ் போக்குவரத்துக்காக போடப்பட்ட 64 சாலைகள் மேம்படுத்தப்படும். இப்பகுதிகளில் புதிதாக ரூ. 41.50 கோடி மதிப்பில் 11 புதிய பாலங்கள் கட்டப்படும்.
இதுதவிர ஆதி திராவிட குடியிருப்புகளை இணைக்கும் வகையில், 75 சாலைகள் போடப்படும். 11 பாலங்களும் கட்டப்படும். இப்பணிக்காக ரூ. 36.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மொத்தமாக, 358 பஞ்சாயத்துக்கள், பஞ்சாயத்து யூனியன்களில் 910 கிலோமீட்டர் தொலைவு கொண்ட சாலைகள் போடப்படும். 49 பாலங்கள் கட்டப்படும்.
இந்தப் பணிகளை விரைவில் முடிக்குமாறும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.