மனைவி நடத்தையில் சந்தேகம்-2 மகன்களை கொன்று தந்தை தற்கொலை
மதுரை: மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் 2 மகன்களை விஷம் கொடுத்து கொன்றவிட்டு தந்தையும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மீனாட்சி தோப்புப் பகுதியை சேர்ந்தவர் ரத்தினபாண்டியன்(32). இவரது மகன்கள் கோபி கிருஷ்ணன்(10), ராமகிருஷ்ணன்(8).
இந்தக் குடும்பத்தினர் சொந்த ஊரான தூத்துக்குடி சென்றனர். அப்போது மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டு விட்டு மகன்களுடன் வீடு திரும்பினார் ரத்தினபாண்டியன்.
இதையடுத்து குளிர்பானத்தில் விஷத்தை கலந்து தனது மகன்களுக்கு கொடுத்துள்ளார் ரத்தின பாண்டியன். மகன்கள் இறந்ததை உறுதி செய்த பின்னர் தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று காலையில் வெகுநேரம் ரத்தினபாண்டியனின் வீடு திறக்கப்படாததை கண்ட அவரது உறவினர்கள் சந்தேகம் அடைந்து கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது ரத்தினபாண்டியன் தனது 2 மகன்களுடன் இறந்து கிடந்ததை பார்த்த மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் சோதனை நடத்திய போலீசார் ரத்தினபாண்டியன் எழுதிய ஒரு கடிதத்தை கைப்பற்றினர்.
அதில் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் இந்த செயலில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளார்.
அண்டை வீட்டாரிடம் போலீசார் விசாரித்தபோது, கணவன் மனைவி இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்த விவரமும் தெரியவந்துள்ளது.
ரத்தின பாண்டியனின் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.