'ஓவர்' டிக்கெட்: இறக்கி விடப்பட்ட பயணிகள்!
மும்பை: மும்பையிலிருந்து லண்டன் வழியாக சிகாகோ செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் அதிக அளவில் டிக்கெட் கொடுக்கப்பட்டதால், சீட் இல்லை என்ற காரணத்தைக் கூறி 50 பயணிகள் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டனர்.
மும்பையிலிருந்து லண்டன் வழியாக சிகாகோ செல்லும் ஏர் இந்திய விமானம் இன்று காலை புறப்படத் தயாராக இருந்தது.
ஆனால் விமானத்திற்குள் பயணிகள் கூட்டம் வழக்கத்திற்கு விரோதமாக அலை மோதியது. என்ன காரணம் என்று புரியாமல் விமானிகள் ஏர் இந்தியா அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அதிகாரிகள் விரைந்து வந்து பயணிகளிடம் விசாரித்தபோது, இருக்கைகளுக்கு மேல் அதிக அளவில் டிக்கெட் கொடுக்கப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து 50 முதல் 60 பயணிகள் வரை விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர்.
இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தனர். விமான நிறுவனத்தின் குளறுபடிகளுக்கு எங்களைப் பலிகடாவாக்குவதா என்று அவர்கள் கடுமையாக வாதிட்டனர்.
அவர்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள், அவர்களை நாளை செல்லும் விமானத்தில் அனுப்பி வைப்பதாக கூறி ஹோட்டல்களுக்கு அனுப்பி வைத்தனர்.