திருடனை சரமாரியாக அடித்து, கண்களில் ஆசிட் ஊற்றிய கொடூரம்
ஜல்பைகுரி: மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் பாக்கு திருடிய திருடனைப் பிடித்த ஊர் மக்கள் அவரை சரமாரியாக அடித்தனர். பின்னர் ஜீப்பில் கட்டி சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றனர். அப்படியும் ஆத்திரம் தீராமல் திருடனின் கண்களில் ஆசிட் ஊற்றிக் கொடுமைப்படுத்தினர். தற்போது அந்த நபர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
ஜல்பைகுரி மாவட்டம், தெற்கு பல்லகுரி கிராமத்தில், சந்தோஷ் ரய் (26) என்ற வாலிபர் ஒரு கடையில் பாக்கு திருடியுள்ளார். இதைப் பார்த்த கிராமத்தினர் சந்தோஷை வளைத்துப் பிடித்து சரமாரியாக அடித்தனர்.
பின்னர் ஒரு ஜீப்பில் கட்டி, 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்திற்கு தரதரவென இழுத்துச் சென்றனர். பின்னர் அங்கு வைத்தும் சந்தோஷை சரமாரியாக அடித்தனர். அப்படியும் ஆத்திரம் தீராமல், அவரது இரு கண்களிலும் ஆசிடை ஊற்றியுள்ளனர்.
அதன் பிறகு அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. அனேகமாக அவர் உயிரிழந்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
பீகாரில் கடந்த ஆண்டு இதேபோல ஒரு திருடனை, பாகல்பூர் என்ற இடத்தில் சரமாரியாக அடித்து, 2 போலீஸார் தங்களது மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் நினைவிருக்கலாம். அந்த நபர் பின்னர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் ஜல்பைகுரியில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து சந்தோஷின் சகோதரர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் கடைசியாக தனது சகோதரரை ஒரு கும்பல் தோர்ஷா ஆற்றுப் பக்கம் கொண்டு சென்றதைப் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications