முதல்வருடன் சிமென்ட் ஆலை அதிபர் சந்திப்பு
சென்னை: சிமென்ட் ஆலைகளை அரசே கையகப்படுத்தும் என முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன இயக்குநர் சீனிவாசன், தனியார் சிமென்ட் நிறுவனங்களின் சார்பில் முதல்வரை சந்தித்து சிமென்ட் விலை குறைப்பு குறித்து பேச்சு நடத்தினார்.
தமிழகத்தில் சிமென்ட் விலை மிக மிக அதிக அளவில் உயர்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்களின் வீடு கட்டும் கனவு மிகப் பெரும் சிக்கலை சந்தித்துள்ளது. சிமென்ட் விலை உயர்வால் கட்டுமான செலவும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய அரசு நிறுவனத்திடமிருந்து சிமென்ட் வாங்கப்பட்டு பொது விநியோக முறையில் நுகர்வோர்களுக்கு, அடக்க விலையில் விற்பனை செயய்ப்படும்.
தனியார் சிமென்ட் உற்பத்தியாளர்கள் தாங்களாக முன்வந்து விலையைக் குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களது ஆலைகளை அரசு கையகப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் எச்சரித்தார்.
இந்த நிலையில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன இயக்குநர் சீனிவாசன் நேற்று முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். தனியார் சிமென்ட் ஆலை அதிபர்கள் சார்பாக அவர் முதல்வரை சந்தித்தார்.
முதல்வரை சந்தித்து விட்டுத் திரும்பிய சீனிவாசன், முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து தனியார் சிமென்ட் உற்பத்தியாளர்களுடன் ஜனவரி 10ம் தேதிக்குள் பேசுவேன். அதன் பின்னர் மீண்டும் முதல்வரை சந்திப்பேன். அப்போது நல்ல முடிவு ஏற்படும் என நம்புகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications