சிலை வைக்க ஆடு, பிரியாணி, டிவி லஞ்சம்: இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர்
சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே, காமராஜர் சிலை அமைக்க அனுமதி தருவதற்கு, ஆட்டுக் குட்டி, பிரியாணி, கலர் டிவி ஆகியவற்றை லஞ்சமாக வாங்கிய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் அதிரடியாக மாற்றப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தில் காமராஜர் வெண்கல சிலை அமைக்க முடிவு செய்து அதற்கான குழுவும் அமைக்கப்பட்டது. இதன் அமைப்பாளராக ஸ்டாலின் என்பவர் செயல்பட்டு வந்தார்.
சிலை அமைப்பதற்கு முறைப்படி அனுமதி கேட்டு மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பிக்கு மனு செய்திருந்தனர். அது குறித்து விசாரித்து அனுமதி வழங்கும்படி சாத்தான்குளம் போலீசாருக்கு அவர்கள் உத்தரவிட்டனர்.
ஆனால் காமராஜர் சிலை வைக்க இன்ஸ்பெக்டர் அனுமதி தராமல் இழுத்தடித்தாக தெரிகிறது. சிலை அமைப்பு குழுவினரிடம் 2 ஆட்டு குட்டிகள் கேட்டதாகவும், தினமும் பிரியாணி அனுப்பி வைக்கும்படி கேட்டதாகவும், கலர் டிவி தருமாறும் அவர் கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து சிலை அமைப்பாளர் ஸ்டாலின் கலெக்டர், தொகுதி எம்எல்ஏ, தாசில்தார் ஆகியோர் உள்பட 7 பேருக்கு புகார் மனு அனுப்பினார்.
இதையடுத்து சாத்தான்குளம் டிஎஸ்பி காந்தி விசாரணை நடத்தினார். விசாரணையில் புகார் உண்மை என்று தெரிய வந்ததால், இன்ஸ்பெக்டர் பிரவின்குமார் அதிரடியாக கயத்தாறுக்கு மாற்றப்பட்டார். இதுபோல் அதே ஸ்டேஷனில் பணியாற்றிய எஸ.ஐக்கள் கலா, வேணுகோபால் ஆகியோர் மசார்பட்டிக்கும், செல்வன் முத்தையபுரம் காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
வினோதமான லஞ்சம் கேட்டு டிரான்ஸ்பர் ஆன இவர்கள் குறித்து தூத்துக்குடி காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.