ஓசூர் அருகே ஆற்றுக்குள் பாய்ந்த லாரி: 2 பேர் பலி
ஓசூர்: ஓசூர் அருகே சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய மற்றொரு லாரி, கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்ததில் ஓட்டுநரும், கிளீனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னையிலிருந்து ஓசூர் நோக்கி வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஓசூர் அருகேயுள்ள பேரண்டஅள்ளியில் உள்ள தென்பெண்ணை ஆற்றுப் பாலத்தை நெருங்கிய போது பழுதாகி நின்றுவிட்டது.
பின்னர் லாரியை பழுது பார்த்துவிட்டு புறப்பட தயாராக இருந்தபோது, சேலத்திலிருந்து பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு லாரி தென்பெண்ணை ஆற்றுப்பாலத்தை நெருங்கிய போது, கண்டெய்னர் லாரி மீது பலமாக மோதியது.
இதில் அந்த லாரி தறிகெட்டு ஓடி பாலத்தின் தடுப்புகளை இடித்து தள்ளி விட்டு நேராக ஆற்றுக்குள் பாய்ந்தது. கண்டெய்னர் லாரியும் சாலையோரம் கவிழ்ந்தது.
ஆற்றுக்குள் பாய்ந்த லாரியில் இருந்த திண்டிவனத்தை சேர்ந்த டிரைவர் பாபு (30), புதுச்சேரியை சேர்ந்த கிளீனர் அய்யனார் (38) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கண்டெய்னர் லாரியின் டிரைவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
தகவல் அறிந்த போலீசார், கிரேன்களுடன் வந்து ஆற்றுக்குள் விழுந்த லாரியை மீட்டு, டிரைவர் மற்றும் கிளீனரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications