இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
சிங்கப்பூர்: மும்பையில் பிறந்து, சிங்கப்பூர் குடிமகனாகி அங்கு பெட்ரோலிய நிறுவன அதிபராக விளங்கிய ராபர்ட் விஸ்வநாதன் சந்திரன் இந்தோனேசியாவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பலியானார்.
மும்பையில் பிறந்தவர் ராபர்ட் விஸ்வநாதன் சந்திரன். பின்னர் சிங்கப்பூர் குடிமகனாகி அங்கு வசித்து வந்தார். 57 வயதான சந்திரனுக்கு விவியன் என்ற மனைவியும், ஷரோன் (31), ஆஷ்லே (20) என்ற இரு மகள்களும் உள்ளனர்.
சிங்கப்பூரைச் சேர்ந்த செம்ஆயில் எனர்ஜி என்ற பெட்ரோலிய நிறுவனத்தை நிறுவி அதன் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்தார். இந்த நிறுவனம் கடந்த 2006ம் ஆண்டு சிங்கப்பூரின் முதன்மையான வர்த்தக நிறுவனமாக அறிவிக்கப்பட்டது.
சந்திரனுக்கு 490 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சொத்துக்கள் உள்ளன. சிங்கப்பூரின் முன்னணி தொழிலதிபராகவும் விளங்கி வந்தார்.
திங்கள்கிழமை இந்தோனேசியாவின் எண்ணை வளம் மிக்க ரியாவ் மாகாணத்தில் அவர் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி சந்திரன் உயிரிழந்தார்.