மதுரை போட்டோகிராபருக்கு லண்டன் விருது
மதுரை: மதுரையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆர்.செந்தில்குமரனுக்கு, லண்டன் ராயல் ஜியாகிரபிகல் சொசைட்டியின் 2007ம் ஆண்டுக்கான சிறந்த புகைப்படக் கலைஞருக்கான விருது கிடைத்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் செந்தில்குமரன், கங்கை ஆற்றின் கரையோரம் காயப் போடப்பட்டிருந்த சேலைகளை புகைப்படம் எடுத்திருந்தார். இந்தப் புகைப்படத்தை ராயல் ஜியாகிரபிகல் சொசைட்டியின் சிறந்த புகைப்படத்திற்கான போட்டிக்கு அனுப்பி வைத்தார்.
இந்த புகைப்படத்திற்கு தற்போது சிறந்த புகைப்படத்திற்கான விருதும், செந்தில்குமரனுக்கு 2007ம் ஆண்டின் சிறந்த புகைப்படக் கலைஞர் விருதும் கிடைத்துள்ளது.
உலகெங்குமிருந்து வந்திருந்த 1000 புகைப்படங்களில் செந்தில்குமரனுடைய புகைப்படத்திற்கு விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், அவரது புகைப்படம் மார்ச் 3ம் தேதி லண்டனில் தொடங்கும் புகைப்படக் கண்காட்சியிலும் இடம்பெறவுள்ளது.