ரயில்வே அலுவலகங்கள் மீது கன்னடர்கள் திடீர் தாக்குதல்
பெங்களூர்: கன்னடர்களை புறக்கணிக்கும் ரயில்வேயின் போக்கைக் கண்டித்து பெங்களூர் உள்ளிட்ட கர்நாடகத்தின் பல ஊர்களில் ரயில் நிலையங்கள், அலுவலகங்கள் மீது கன்னட அமைப்பினர் வெறித்தனமான தாக்குதலை நடத்தினர்.
பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட தென் மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 4000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு சமீபத்தில் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் வட மாநிலங்களைச் சேர்ந்த குறிப்பாக ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் சொந்த மாநிலமான பீகாரிலிருந்து அதிகம் பேர் கலந்து கொண்டனர்.
இதற்கு கன்னட ரக்ஷ்ன வேதிகே என்ற கன்னட அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. கர்நாடகத்தில் உள்ள வேலைக்கு கன்னடர்களை நியமிக்காமல் பீகார் மாநிலத்தவரை அதிக அளவில் நியமிப்பதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தேர்வு நடந்த மையங்களுக்குள் புகுந்து சூறையாடினர்.
இந்த நிலையில், நேற்று கன்னட ரக்ஷ்ன வேதிகே அமைப்பைச் ேசர்ந்தவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் குதித்தனர். பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்திய அவர்கள் திடீரென ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
அலுவலகத்திற்குள் ஒவ்வொரு அறையாக புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். மேசை, நாற்காலிகள் உடைக்கப்பட்டன. டியூப் லைட்டுகள் அடித்து நொறுக்கப்பட்டடன.
இதேபோல மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ள ரயில்வே அலுவலகங்களும் தாக்குதலுக்கு ஆளாகின.
கன்னட அமைப்பின் இந்த வெறித்தனமான தாக்குதலால் பெங்களூரில் பரபரப்பு நிலவுகிறது. ரயில்நிலையங்கள், ரயில்வே அலுவலகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு சென்னை மத்திய அரசின் கணக்கு தணிக்கை (ஏஜி) அலுவலக ஊழியர்கள் 24 பேர் பெங்களூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் அதையும் எதிர்த்து கன்னடர்கள் போராட்டத்தில் குதித்தனர். பெங்களூர் ஏஜி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களே போராட்டத்தில் ஈடுபட்டதுதான் மிகவும் கொடுமையானது. இறுதியில் அந்த இடமாற்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.