பொங்கல் நெரிசல் - 56 சிறப்பு ரயில்களுக்கு ஏற்பாடு
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி நிலவும் கூட்ட நெரிசலை சமாளிக்க தென் மாவட்டங்களுக்கு 56 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையொட்டி சென்னையில் வசித்து வரும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், பிற மாவட்டத்தினரும் ஊர்களுக்குப் போய் பொங்களை குடும்பத்தினர், உற்றார், உறவினருடன் கொண்டாடுவது வழக்கம்.
தற்போது பொங்கல் நெருங்கி விட்டதால் ரயில்கள், பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கு செல்லும் ரயில்களுக்கு வரும் 20ம் தேதி வரை இடமில்லை. காத்திருப்போர் பட்டியலில் 400ஐ தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.
ரயிலை விட்டு அரசு பேருந்தில் செல்ல முயல்பவர்களுக்கும் இதே நிலைமை தான். அங்கும் இடமில்லை. இதனால் தென்னக ரயில்வே நாளை (11ம் தேதி) முதல் 17ம் தேதி வரை 56 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு கூறுகையில், பயணிகளின் வசதிக்காக 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை 56 சிறப்பு ரயில்கள் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது.
இது தவிர கோவை, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும்.
இதே போல வேறு இடங்களில் இருந்தும் சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது என தெரிவித்தார்.
புரோக்கர்களின் 'வசூல்' பொங்கல்!
ரயில்கள், பேருந்துகளில் இடம் கி டைக்காதவர்கள் கடைசியில் ஆம்னி பஸ்களை நோக்கி படையெடுக்கின்றனர். ஆனால் ஆம்னி பஸ்சில் மதுரைக்கு செல்ல ரூ.500ம், நெல்லைக்கு ரூ.700ம், கன்னியாகுமரிக்கு ரூ.900ம் வசூலிக்கப்படுகிறது.
இதில் இடைத்தரகர்களின் தொல்லை தான் அதிகம். இடையில் புகுந்து அதிக பணத்தை பயணிகளிடம் கறந்து வருகின்றனர்.
கடந்த தீபாவளி பண்டிகையின் போது போலீசார் இந்த புரோக்கர்களின் மீது நடவடிக்கை எடுத்தது போல இப்போதும் தொடர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
300 சிறப்பு பஸ்கள்:
பொங்கல் பண்டியை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் 300 சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. இதனால் ஆம்னி பஸ்களில் புரோக்கர்களை நம்பி கூடுதல் பணம் கொடுத்து பயணிக்க வேண்டாம் என போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறினார்.