மோடிக்கு பாதுகாப்பு: தமிழக அரசுக்கு பாஜக கோரிக்கை
சென்னை: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி 14ம் தேதி சென்னைக்கு வரும்போது அவருக்கு உரிய முறையில் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை என்று தமிழக பாஜக தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இல.கணேசன் பேசுகையில், துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பங்கேற்க குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகிறார். அப்போது அவருக்கு உரிய முறையில் பாதுகாப்பு அளிக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பும், கடமையும் ஆகும்.
அவருக்கு கருப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்தப் போவதாக சில கட்சிகள் அறிவித்துள்ளன. எனவே மோடியின் பாதுகாப்புக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.
இசட் பிளஸ் பாதுகாப்பின் கீழ் உள்ள முதல்வர் நரேந்திர மோடி. எனவே தமிழக அரசு மோடிக்கு உரிய பாதுகாப்பை கொடுத்தாக வேண்டும்.
மோடியின் தமிழக பயணம் எந்தவித பிரச்சினையும் இன்றி நடப்பதை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் பொறுப்பாகும்.
மோடி ஒரு தேசியவாதி. தீவிரவாதத்திற்கு எதிராக தீவிரமாக போராடி வருபவர். ஆனால் சில தலைவர்கள் தீவிரவாதிகள் மீதும், தீவிரவாதம் குறித்தும் மிகவும் மென்மையான போக்கைக் கையாண்டு வருகிறார்கள் என்றார் இல.கணேசன்.