Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்மூடித்தனமாக அரசை குறை சொல்லக் கூடாது - கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi

சென்னை: தமிழக அரசின் எல்லா நடவடிக்கைகளையும் கண்ணை மூடிக் கொண்டு குற்றம் சொல்ல முற்பட்டால் அது சரியாக இருக்காது என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சிமென்ட் விலை உயர்வு என்பது தமிழகத்தில் மட்டும் உள்ள பிரத்தியேகமான நிலையல்ல. அகில இந்திய அளவில் உள்ள பிரச்சனை. இந்த பிரச்சனையை ஓரளவிற்கேனும் தீர்க்க வேண்டுமென்ற நோக்கத்துடன் மத்திய அரசு சிமென்ட் மீதான கலால் வரி வீதத்தில் கடந்த வருடம் திருத்தம் செய்கிறது.

எனினும் அதன் காரணமாக சிமென்ட் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும், வர்த்தகத்துறை அமைச்சர் நண்பர் கமல்நாத்தும் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.

அதன் பின்னர் மத்திய அரசு பலமுறை சிமென்ட் தொழிற்சாலை அதிபர்களையெல்லாம் அழைத்து பேசி பார்த்தும், கடுமையாக எச்சரிக்கை செய்தும் அவர்கள் சிமென்ட் விலையைக் குறைக்கத் தயாராக இல்லை.

குறிப்பிட்ட ஒரு மாநிலம் என்றில்லாமல், இந்தியாவிலே உள்ள அனைத்து மாநிலங்களிலும் சிமென்ட் விலை கடுமையாக உயர்ந்து கொண்டே இருந்தது.

மிகுந்த அதிகாரத்தை தன்னகத்தே கொண்டுள்ள மத்திய அரசின் பல்வேறு முயற்சிகளும் பலனளிக்காத நிலையில்தான் வேறு எந்த மாநில அரசும் இதுவரை எடுத்திராத முயற்சியை தமிழக அரசு எடுத்தது.

அதன் முதற் கட்டமாக சிமென்ட் விலையைக் குறைப்பதற்கு வெளிநாடுகளில் இருந்து சிமென்டை இறக்குமதி செய்திட அது தொடர்பான நடவடிக்கைகளில் இறங்கியது.

தமிழக அரசு அத்துடன் இந்த முயற்சியை நிறுத்திக் கொள்ளாமல், சிமென்ட் உற்பத்தியாளர்களுடன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அளவில் நடத்திய பேச்சுவார்த்தைகள் உரிய பலனைத் தரவில்லை என்பதால் இறுதியாகத்தான் தனியார் சிமென்ட் ஆலை அதிபர்கள் சிமென்ட் விலையைக் குறைக்க முன் வரவில்லை என்றால் அரசே நாட்டுடைமையாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என முடிவெடுத்து அறிவித்தோம்.

அப்போது கூட சிலர், இதுவெறும் ஸ்ட்ண்ட் என்றும், மிரட்டுவதற்கான அறிவிப்பு என்றும் சொன்ன நேரத்தில் நாட்டுடைமையாக்குவதற்கான சட்ட முன் வடிவினை தயாரிக்கும் பணியில் அரசு ஈடுபட்டது.

அந்தச் செய்திகளையெல்லாம் தெரிந்து கொண்ட பின்னர்தான் சிமென்ட் ஆலை அதிபர்கள், அவர்களுக்குள் கலந்தாலோசித்து அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திட தாங்களாகவே முன்வந்தார்கள்.

அந்த பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் தான் அந்த ஆலை அதிபர்கள் அரசுக்கு ஒரு கடிதம் கொடுத்தார்கள்.

அந்த கடிதத்தில், முதல்வர் தெரிவித்த கருத்தினை மனதில் கொண்டு, பொருளாதார ரீதியாக பின் தங்கிய மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் பயனளிக்கத்தக்க வகையில் மாதம் ஒன்றுக்கு 20 லட்சம் சிமென்ட் மூட்டைகளை ரூ.200க்கு விற்பதற்கு ஒப்புதல் தெரிவித்தனர்.

அந்தச் செய்தி அனைத்து ஏடுகளிலும் வெளிவந்து, தமிழகத்திலே பல்வேறு தரப்பினரும் தங்களுடைய மகிழ்ச்சியையும், பாராட்டையும் தெரிவித்தும், அரசுக்கு நன்றி கூறியும் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிற நேரத்தில் ஒருசில தலைவர்கள் மட்டும், சொந்த விருப்பு, வெறுப்பின் காரணமாக இந்த அறிவிப்பினை கண்துடைப்பு என கருத்து சொல்லியிருக்கிறார்கள்.

கண் துடைப்பு என சொல்வதற்குக் காரணமாக இறக்குமதி செய்யப்படும் சிமென்ட் மூட்டை 1க்கு ரூ.160 விற்க முடிகின்ற போது, உள்ளூரில் உற்பத்தி செய்கிற சிமென்டை ரூ.200க்கு விற்க முன்வந்திருப்பது விலை குறைப்பு அல்ல எனக் கூறுகிறார்கள்.

குறை கூற வேண்டுமென்று நினைக்கிற போது, அது பற்றிய விவரங்களை யாரிடமாவது கேட்டறிந்து வெளியிட்டால் நல்லது. எல்லாமே தங்களுக்குத் தெரியும், மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைப்பது சரியல்ல.

சிமென்ட் மூட்டை ஒன்றுக்கு ரூ.160 விலையில் விற்க முடிகிறது என்றால், அந்த விலைக்கு எங்கே கிடைக்கிறது என தெரிந்து கொள்ள வேண்டாமா.

வெளிநாடுகளிலிருந்து சிமென்டை மத்திய அரசின் நிறுவனமான எம்.எம்.டி.சி மூலம் இறக்குமதி செய்யும் போது சென்னை துறைமுகத்தில் நிற்கும் கப்பலில் உள்ள சிமென்ட் மூட்டை ஒன்றின் விலை ரூ.160 என்று மத்திய அரசின் நிறுவனம் நிர்ணயம் செய்தது.

கடலில் உள்ள சிமென்ட் தானாக கட்டடம் கட்டப்படுகிற இடத்திற்கு வந்து விடாது. அந்த சிமென்டை கப்பலில் இருந்து இறக்கி அதற்காக அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளையெல்லாம் கொடுத்து, சிமென்டை கப்பலிலிருந்து விற்பனை செய்கின்ற இடம் வரை கொண்டு சேர்த்திட அதே ரூ.160 விலை தான் என்று அர்த்தமல்ல.

ஒரு மூட்டைக்கு வரியாக 30 ரூபாயும், சிமென்டை ஏற்றி, இறக்குவதற்கும், போக்குவரத்துக்கும் ரூ.40ம் அடக்கமாகிறது. இதையெல்லாம் சேர்த்து கணக்கிட்டால் 1 மூட்டை ரூ.230 அடக்கம் ஆகிறது.

ஆனால் தற்போது தமிழகத்தில் உள்ள சிமென்ட் ஆலை அதிபர்கள் 1 மூட்டை சிமென்டை ரூ.200வீதம் ஒவ்வொரு மாதமும் 20 லட்சம் மூட்டைகளை விற்பனை செய்ய ஒப்புக் கொண்டிருப்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அரசு எந்தளவிற்கு இந்த முயற்சியிலே வெற்றி பெற்றுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

திமுக அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்ணை மூடிக் கொண்டு குற்றம் சொல்ல முற்பட்டால் அது சரியாக இருக்காது. மேலும் முன்பே அரசு அறிவித்ததற்கு இணங்க இறக்குமதி செய்யப்படும் சிமென்டும் வந்து சேர்ந்தவுடன் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் மூலமாக அடக்க விலைக்கு விற்கப்படும்.

அது மட்டுமின்றி, டான்செம் விளம்பரத்தில் தெரிவித்ததை போல 100 டன்களுக்கு மேல் சிமென்ட் வாங்க எண்ணுபவர்கள் மட்டுமே சென்னை அல்லது தூத்துக்குடி துறைமுகங்களுக்கு வரும் கப்பலில் இருந்து மூட்டை 1க்கு ரூ.160 செலுத்தி வாங்கலாம்.

இவ்வாறு எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளின் மூலமாக சிமென்ட் விலை வெளிச்சந்தையில் கணிசமாக குறையும் என முதல்வர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+