'டாக்' ரவி, 'வரிச்சியூர்' செல்வம் மீது பாய்கிறது குண்டாஸ்
மதுரை: மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடிகளான டாக் ரவி, வரிச்சியூர் செல்வம் மற்றும் அழகர் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மதுரை, பெத்தானியாபுரத்தை சேர்ந்த ரவுடிகள் 5 பேரை போலீசார் கடந்த வாரம் சென்னையில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி டாக் ரவியை கொலை செய்ய வந்ததாக தெரிவித்தனர்.
மதுரையை மையமாக வைத்து ரவுடிக் கும்பல்கள் அதிகம் செயல்பட்டு வருவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மேலும் டாக் ரவி, திண்டுக்கல் பாண்டி ஆகியோரை சுட்டுப் பிடிக்கவும் டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
இதனையடுத்து மதுரை போலீஸ் கமிஷனர் நந்தபாலன் உத்தரவின் பேரில் ரவுடிகள் வேட்டை தீவிரமானது.
இந்நிலையில் சென்னையில் கைது செய்யப்பட்ட ரவுடி அழகரின் கூட்டாளிகள் 2 பேர் உட்பட முக்கிய ரவுடிக் கும்பல்களை சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில் தான் திருந்தி வாழ்வதாக சொல்லிக் கொண்டு திரைமறைவாக ரவுடியிசத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்த வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.
சைக்கிள் வந்த டாக் ரவி:
சுட்டுப் பிடிக்க உத்தரவிடப்பட்ட டாக் ரவி யாருமே எதிர்பாராத வகையில் நேற்று மிக சாதாரணமாக தனியாக சைக்கிளில் வந்து திருமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
டாக் ரவியை நீதிபதி 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
50 கோடி சொத்து:
நீதிமன்றத்தில் ஆஜரான பிரபல ரவுடி டாக் ரவிக்கு மதுரை, திண்டுக்கல், வேலூர், சென்னை, பெங்களூர் உட்பட பல இடங்களில் இருக்கும் சொத்துக்களின் மதிப்பு மட்டும் ரூ.50 கோடிக்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
போலீசார் டாக் ரவியின் சொத்துக்களை கணக்கெடுக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.
குண்டர் சட்டத்தில் அடைக்க முடிவு:
மதுரையை இதுநாள் வரை கலக்கி வந்த டாக் ரவி, அழகர், வரிச்சியூர் செல்வம் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
மேலும் தலைமறைவாக உள்ள பயங்கர ரவுடிகள் 25 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications