பெண்ணை 24 மணி நேரம் கோயிலுக்குள் பூட்டிய கொடூரம்
சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே அருள் வாக்கு என்ற பெயரில், இளம்பெண்ணை இரவு முழுவதும் கோயிலுக்குள் பூட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துககுடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள பள்ளிபத்தை சேர்ந்தவர் வேங்கை நடேசன் மகள் அனிதா. இவர் அங்குள்ள முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று அடிக்கடி வழிபடுவது வழக்கம். மேலும் இவர் அவ்வப்போது ஊர் மக்களுக்கு அருள் வாக்கு கூறுவதுண்டு. இவரது வாக்கு பலிப்பதாக அக்கிராம மக்கள் நம்புக்கின்றனர்.
இந்த கோயிலில் தினமும் இரவு 7 மணிக்கு அம்மனுக்கு பூஜைகள் நடைபெறும். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு அம்மனுக்கு பூஜை நடந்து கொண்டிருந்தது. அப்போது தரிசனம் செய்து கொண்டிருந்த அனிதா திடீரென ஆடியபடியே அம்மன் சிலை அருகில் சூலத்துடன் ஓடிச் சென்று எனக்கும் பூஜை செய்யுங்கள் என கூறினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கோயில் பூசாரி மற்றும் ஊர் மக்கள் அனிதாவை அங்கிருந்து அகற்ற முயன்றனர். ஆனால் அவர் வர மறுத்து எனக்கும் குங்கும அபிஷேகம் செய்து என்னை கருவறைக்குள்ளேயே வைத்து கோயில் நடையை சாத்தி விட்டு செல்லுங்கள். நாளை மாலை 6 மணிக்கு மேல்தான் கோயில் நடையை திறக்க வேண்டும். இடையில் மீறி திறந்தால் நான் சிலையாகி விடுவேன் என ஆவேசமாக கூறினார்.
இதையடுத்து மிரண்டு போன ஊர்மக்கள் அனிதாவுக்கு அபிஷேகம் செய்து அவரை கருவறைக்குள் அமரவைத்து விட்டு கோயில் நடையை சாத்தினர்.
பின்னர் பலர் கருவறைக்கு வெளியே நின்றபடி அனிதாவிடம் என் மகளுக்கு திருமணம் நடக்குமா, மகனுக்கு வேலை கிடைக்குமா, என்று குறி கேட்டனர். பூட்டிய கருவறைக்குள் இருந்தபடியே அனிதா ஒவ்வொரு பக்தர்களின் கேள்விக்கும் 'பதிலளித்தார்'.
ஒரு பக்தர் நம்ம ஊரு நல்ல இருக்குமா தாயீ என்று கேட்டதற்கு நம்ம ஊருல இந்த வருஷம் மழை குறைவாகத்தான் இருக்கும் என 'வெதர் போர்காஸ்ட்டும்'டும் கொடுத்தார் அனிதா.
இப்படியாக விடிய விடிய பலர் அனிதாவிடம் குறி கேட்டுச் சென்றனர்.
நேற்று மாலை 6 மணி வரை வெளியே நின்ற பக்தர்களுக்கு அனிதா அருள்வாக்கு கூறிக் கொண்டிருந்தார். ஒருநாள் முழுக்க அவருக்கு உணவு எதுவும் கொடுக்கப்படவில்லை. 'அம்மன் தனக்கு எதுவும் படைக்க வேண்டாம்' என்று சொன்னதால் சாப்பிட எதுவும் வைக்கவில்லை என்று பக்தர்கள் தெரிவித்தனர்.
மாலை 6 மணிக்கு கோயில் பூசாரி மீது 'சாமி' வந்து அம்மனை வெளியே அழைத்து வாருங்கள் என்று உத்தரவிட்டார். இதன்பின் கருவறை திறக்கப்பட்டு அங்கிருந்து அனிதா வெளியே வந்தார். அவருக்கு மஞ்சள் நீராட்டி தீப ஆராதனை காட்டப்பட்டது. பின்னர் அவருக்கு குடிக்க இளநீர் மட்டும் கொடுக்கப்பட்டது.
இந்த தகவல் அறிந்த சுற்று வட்டார மக்கள் திரளாக கோயிலுக்கு சென்று அனிதாவிடம் அருள் வாக்கு கேட்டனர். இந்த சம்பவம் சாத்தான்குளம் வட்டாரத்தில் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டுக்குள் பெண்ணைப் பூட்டி வைக்காதீர்கள் என்று அன்று பாரதி பாடினார். இன்றோ, கோவிலுக்குள் பூட்டி வைத்து அருள் வாக்கு கேட்டுள்ளனர் மக்கள்.
நல்ல வளர்ச்சி!