தடையை மீறி ஜல்லிக்கட்டுக்களை நடத்த பல கிராமங்கள் முடிவு!
மதுரை: உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை மீறி அதிரடியாக ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு ஆகியவற்றை நடத்த பல கிராமங்களில் ரகசியமாக திட்டமிடப்பட்டுள்ளதால் தென் மாவட்டங்களில் பரபரப்பு நிலவுகிறது.
பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதை ஏற்க முடியாது என்று தென் மாவட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர்.
தடையை பொருட்படுத்தாமல் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சூரக்குடியில் மஞ்சு விரட்டு நடத்தப்பட்டது. இதையடுத்து ஊர் அம்பலகாரர்கள் உள்பட 4 போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து ஊர் மொத்தமும் திரண்டு வந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டது. இதனால் பதட்டம் அதிகரித்தது.
இதையடுத்து நான்கு பேரையும் போலீஸார் தங்களது சொந்த ஜாமீனில் விடுதலை செய்தனர்.
இந்த நிலையில், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் ேசர்ந்த பல்வேறு கிராமத்தினரும், அதிரடியாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானித்துள்ளனராம்.
பொங்கல் பண்டிகையின்போதோ அல்லது மாட்டுப் பொங்கலின்போதோ தடாலடியாக காளைகளை அவிழ்த்து விட்டு ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சு விரட்டை நடத்த அவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
இதன் காரணமாக தென் மாவட்ட போலீஸார் பெரும் குழப்பமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக காளைகளை அவிழ்த்து விட்டால் அதை எப்படி சமாளிப்பது, பிடிப்பது என்ற கவலையிலும், குழப்பத்திலும் அவர்கள் ஆழ்ந்துள்ளனராம்.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு நடக்கும் கிராமங்களில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications