தமிழகம்-கர்நாடகத்தை கலக்கிய ரவுடிக் கும்பல் கைது

பெங்களூர்: தமிழகத்திலும் கர்நாடகத்திலும் தேடப்பட்டு வந்த மிகப் பெரிய கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், போதை மருந்து கடத்தல் கும்பல் பிடிபட்டுள்ளது.
ஜேசிபி நாராயணசாமி என்ற ரெளடியின் தலைமையில் செயல்பட்டு வரும் இந்தக் கும்பல் தமிழகம்-கர்நாடகத்தில் ஏகப்பட்ட கொலைகளை செய்துள்ளது. கொள்ளைகள், கடத்தல், வழிப்பறிகளை அரங்கேற்றியுள்ளது.
14 பேர் கொண்ட இந்தக் கும்பலை பெங்களூர் கிரைம் பிராஞ்ச் போலீசார் வளைத்துப் பிடித்துள்ளனர்.
இது குறித்து பெங்களூர் போலீஸ் கமிஷ்னர் அச்சுதராவ் நிருபர்களிடம் கூறுகையில்,
பெங்களூரின் எலெக்ட்ரானிக் சிட்டி, மைகோ லே-அவுட், சிக்க பேகூர், தொடக்க பேகூர், தென்-கிழக்கு பெங்களூர் ஆகிய பகுதிகளில் வெறியாட்டம் போட்டு வந்த கும்பல் இது.
இந்தக் கும்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்னி நாகா என்ற இன்னொரு ரெளடியை எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் வைத்து போட்டுத் தள்ள திட்டமிட்டிருந்தது. இந்தத் தகவல் எங்களுக்குக் கிடைத்தது.
அதை வைத்து இந்தக் கும்பலை ட்ரேஸ் செய்து அமுக்கினோம். இவர்களிடம் இருந்து ஜெர்மன் ரிவால்வர், 30 நாட்டு துப்பாக்கிகள், பட்டாக் கத்திகள், 3 கார்கள், போலி நம்பர் பிளேட்டுகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.
எல்லைப் பகுதியில் இருந்தபடி தமிழகத்திலும் பெங்களூரிலும் இந்தக் கும்பல் பல்வேறு கொலைகளை அரங்கேற்றியுள்ளது. பலரைக் கடத்தி பணம் பறித்துள்ளது. வழிப்பறிகள் நடத்தியுள்ளது.
பெங்களூர்-ஒசூர் பகுதிகளில் போலியான ஆவணங்களைத் தயார் செய்து பலரது நிலங்களை இந்தக் கும்பல் அபகரித்துள்ளது. அரசு நிலத்தையும் கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை.
தனியாரை மிரட்டியும், அதிகாரிகளை மிரட்டியும் நிலங்களை தங்கள் பெயருக்கு மாற்றியுள்ளது.
போலீசுக்கு நீண்ட காலமாக சவால் விட்ட ஒரு கும்பல் பிடிபட்டுள்ளது என்றார் ராவ்.












Click it and Unblock the Notifications