இலங்கை பஸ்சில் குண்டு வெடித்து 24 பேர் பலி
கொழும்பு: இலங்கையில் மொனரகல்லா மாவட்டத்தில் பயணிகள் பேருந்தில் குண்டு வெடித்ததில் 24 பேர் பலியாயினர். மேலும் 67 பேர் படுகாயமடைந்தனர்.
ஹெலகமா என்ற இடத்தில் இன்று காலை இச் சம்பவம் நடந்தது. விடுதலைப் புலிகள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
ராணுவத்தினர் கூறுகையில், புட்டலா என்ற இடத்தில் இருந்து ஒக்கம்பித்தியா என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்தில் பள்ளிக் குழந்தைகள் அதிகளவில் இருந்தனர்.
குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள் புட்டலா மற்றும் மோனரகலா மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றனர்.
ஆனால், அந்த பஸ்சில் குழந்தைகள் யாரும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. அது ஜவுளி ஆலைத் தொழிலாளர்கள் சென்ற பஸ் என கொழும்பில் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காயமடைந்தவர்களில் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கண்ணிவெடியில் சிக்கிய ராணுவம்:
அதே போல ராணுவ வாகனம் கண்ணி வெடியில் சிக்கியதில் 3 ராணுவத்தினர் படுகாயமடைந்தனர்.
பஸ்சில் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து சில கி.மீ தூரத்தில் உள்ள கல்ஜே என்ற இடத்தில் இந்தத் தாக்குதல் நடந்தது.