மேற்கு வங்கத்தில் பறவைக் காய்ச்சல்-நாமக்கல்லில் பீதி
கொல்கத்தா&நாமக்கல்: மேற்கு வங்கத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவியுள்ளது. இதையடுத்து நாமக்கல் மாவட்டம் உள்பட தமிழகத்தில் இந்த நோய் பரவாமல் தடுக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேற்கு வங்கத்தின் பிர்பும் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் சுமார் 18,000க்கும் மேற்பட்ட கோழிக் குஞ்சுகள் திடீரென இறந்தன. இதையடுத்து தெற்கு தினஜ்பூர் மாவட்டத்திலும் கோழிகள் பலியாயின.
இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்தப் பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது உறுதியானது. இப் பகுதியில் H5N1 என்ற வைரஸ் பறவைகளைத் தாக்கி வருகிறது.
இதையடுத்து இந்தப் பகுதிகளில் உள்ள அனைத்து கோழிகளையும் கொல்ல அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் அவை கொல்லப்படவுள்ளன. சுமார் 8 லட்சம் கோழிகள் கொல்லப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக மணிப்பூரிலும் மகாராஷ்டிரத்திலும் கோழிகள் மர்மமாக பலியாகின. இதற்கும் பறவைக் காய்ச்சலே காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் கோழி, முட்டை உற்பத்திக்கு பேர் போன நாமக்கல்லில் பீதி பரவியுள்ளது. இங்கும் சேலம் மாவட்டத்திலும் உள்ள ஆயிரக்கணக்கான கோழிப் பண்னைகளில் பறவைக் காய்ச்சல் பரவிடாத வகையில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இப் பகுதியில் கோழிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் கோழிப் பண்ணைகளில் மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. கோழிகளுக்கு மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
மேற்குவங்க கோழிகளுக்கு தமிழகத்தில் தடை:
இந் நிலையில் தமிழகத்துக்கு மேற்குவங்கத்தில் இருந்து கோழி இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், தமிழகத்தில் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் நோய் இல்லை என்றும் கோழி பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications