பாஜக-அதிமுக-தேமுதிக கூட்டு சேர்ந்தால் '40க்கு 40'

சென்னை: பாஜகவுடன் அதிமுக-தேமுதிக கூட்டணி அமைத்தால் வெற்றி நிச்சயம் என துக்ளக் இதழின் ஆசிரியரும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளருமான சோ கூறியுள்ளார்.
துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் சோ பேசுகையில்,
தமிழக அரசுக்கு பாமக அளிக்கும் நெருக்கடி அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் நிதி நிர்வாகம் படுமோசமடைந்துள்ளது. திமுகவில் யாருக்கு எந்த பதவி கொடுப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கனிமொழிக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்குமா என்பது தெரியவில்லை. பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் கூட இது தெரியாது.
தமிழ்நாட்டில் பாஜக-அதிமுக இடையே கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த இரண்டு கட்சிகளுடன் தேமுதிகவும் சேர்ந்தால் அந்த அணிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி உறுதி. 40 இடங்களும் கிடைக்கும்.
ஆனால் இதற்கு ஜெயலலிதா முன்வருவாரா என்று தெரியாது. விஜயகாந்த் தனித்து போட்டியிட்டால் அவரது கட்சி திமுக, அதிமுக ஓட்டுகளை பிரித்து 3வது இடத்துக்கு மட்டுமே வர முடியும்.
இந்தியாவில் இருப்பது போல கூட்டாட்சி முறையை ஏற்றுக் கொள்வதன் மூலம் தான் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். ராஜீவ்காந்தி கையெழுத்திட்ட ஒப்பந்தத்துக்கு மீண்டும் உயிரூட்டினால் தீர்வு ஏற்படும்.
பாரத ரத்னா விருது பெற வாஜ்பாய் தகுதியானவர்தான். ஆனால் அதை அத்வானி பிரதமரிடம் மட்டும் கூறி இருக்க வேண்டும். இப்படி வெளிப்படையாக சொல்லியிருக்க வேண்டியதில்லை.
பிரதீபா பட்டீலை விட அப்துல்கலாம் கையால் விருது வாங்கியிருந்தால் அது கெளரவமாக இருந்திருக்கும்.
கடந்த அக்டோபர் மாதமே துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அழைத்திருந்தேன். குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுக்கும் இந்த விழாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
காமராஜர் அரங்கில் விழா நடத்த பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதன் மூலம் விழாவுக்கு இலவசமாக விளம்பரம் தேடித்தந்த பல்வேறு அமைப்புகள், கட்சிகளுக்கு நன்றி.
பலவிதமான எதிர்ப்பு இருந்தபோதிலும் விழாவுக்கு தடை ஏற்படுத்தாமல் இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி என்றார் சோ.












Click it and Unblock the Notifications