நீலகிரி-மொத்தமாய் காலியான பழங்குடி கிராமம்
கூடலூர்: நீலகிரி மலையில் அடிப்படை வசதிகளே இல்லாததால், ஒரு ஆதிவாசி கிராமமே காலியாகிவிட்டது.
ஆதிவாசிகள், பழங்குடியினர் நலனுக்காக மத்திய-மாநில அரசுகள் கோடிக்கணக்கான பணத்தை ஒதுக்குகின்றன. ஆனால், இந்தப் பணம் உரியவர்களைப் போய்ச் சேருகிறதா என்றால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
காடுகளையும் மலைகளையும் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த இடத்தையும் மட்டுமே அறிந்தவர்கள் இந்த மக்கள். தங்களைச் சுற்றியுள்ள உலகம் குறித்த பொது அறிவு மிகக் குறைவு.
நீலகிரி மலைப் பகுதிகளில் தான் பெரும்பாலான தமிழகத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். ஓட்டு கேட்க மட்டுமே இவர்களை சந்திக்கும் அரசியல்வாதிகள் பின்னர் திரும்பிக் கூட பார்ப்பதில்லை.
இவர்கள் படும் அவலம் ெசால்லி மாளாது. சமீபத்தில்
நீலகிரி மாவட்டத்தில் ஒரு பழங்குடி கிராமமே மொத்தமாக காலியாகியுள்ளது.
இந்த மாவட்டத்தின் கூடலூர் அருகே உள்ளது சேரம்பாடி ஆதிவாசி கிராமம். இங்கு 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல தலைமுறைகளாக வசித்து வந்தன.
மூலிகை, தேன் விற்பது தான் அடிப்படைத் தொழில், மேலும் ஆடு, மாடுகளையும் வளர்த்து வந்தனர்.
இவர்கள் வசித்த பகுதிக்கு சாலை வசதியோ, தெரு விளக்கோ கிடையாது, குடிநீர் வசதி கூட இல்லை. இந்த வசதிகளைக் கேட்டு அவ்வப்போது போராட்டம் நடத்திய இவர்களுக்கு ஒரு வழியாக வசதிகளை செய்து தர முன் வந்தது ஊராட்சி.
ஆனால், ஒரு தேயிலை தோட்டங் நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதிக்குள் இந்த கிராமம் அமைந்ததால், அடிப்படை வசதிகள் செய்து தர தோட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் காட்டுப் பகுதியில் பொருட்களை சேகரித்து, விற்பனை செய்யவும் ஆதிவாசிகளுக்கு வனத்துறை தடை விதித்தது.
அடிப்படை வசதி இல்லாத நிலையில் வாழவும் வழி இல்லாமல் போனதால் கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகினர்.
இதனால் ஒவ்வொரு குடும்பமாக கிராமத்தைவிட்டு வெளியேறினர். கடைசியாக 3 குடும்பத்தினர் மட்டுமே இங்கு வசித்து வந்தனர்.
இவர்களுக்கு அரசின் இலவச தொலைக்காட்சி வழங்கும் திட்டத்தின் டிவி வழங்க ஊராட்சி முன் வந்தது. இதற்காக இவர்களது வீடுகளுக்கு மின் இணைப்பு கூட தரப்பட்டது.
ஆனால், இவர்களது கெட்ட நேரம் சமீபத்தில் பெய்த கன மழையில் இவர்களது வீடுகள் இடிந்து விழுந்தன. இதையடுத்து அருகில் உள்ள பள்ளி ஒன்றில் தஞ்சம் புகுந்தனர்.
தங்களது வீடுகளை அரசு நிர்வாகம் சரி செய்து என காத்திருந்தனர். ஆனால் யாரும் உதவவில்லை. இதையடுத்து ஊரை விட்டே வெளியேறிப் போய்விட்டனர்.
இதனால் சேரம்பாடி ஆதிவாசி கிராமம் தற்போது முற்றிலும் காலியாகிவிட்டது.