''கடைய மூடிட்டாங்கப்பா''...'குடிமகன்'கள் சோகம்
சென்னை: திருவள்ளுவர் தினத்தையொட்டி இன்று டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டதால் சுதியேற்ற முடியாத 'குடிமகன்'கள் சோகத்தில் மூழ்கினர்.
பொங்கலையொட்டி மதுக் கடைகளில் கூட்டம் கடந்த சில தினங்களாக அலைமோதி வந்தது. பொங்கல் தினமான நேற்று தமிழகம் முழுவதும் மதுக்கடைகளில் அமோக விற்பனை நடந்தது.
இந் நிலையில் இன்று திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த விவரத்தை அறிந்தவர்கள் நேற்றே வாங்கி 'ஸ்டாக்' வைத்துவிட்டனர்.
ஆனால், பேப்பர் படிக்காத 'குடிமகன்கள்' 'கோட்டைவிட்டுவிட்டனர்'. இதனால் இன்று கடைகளுக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தனியார் மதுக்கடைகளை நடத்தும்போது முன் பக்க கதவை மூடிவிட்டு ஜன்னல் வழியாக சரக்கை விற்பார்கள். இந்த ஜன்னல் வழியாகவே போலீசாரும் 'மாமூலை' வாங்கிக் கொண்டு இந்த விற்பனையை கண்டு கொள்ளாமல் போவார்கள்.
ஆனால், மதுக்கடைகள் அரசுக் கடைகளாகி டாஸ்மாக் ஆகிவிட்டதால் ஜன்னல் வழி சேல்ஸ் ஏதும் நடக்கவில்லை.
ஆனாலும் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு அருகிலேயே பைகளில் பாட்டில்களை வைத்துக் கொண்டு அதை கூடுதல் விலைக்கு பலர் விற்றுக் கொண்டிருந்தை பார்க்க முடிந்தது.
சில இடங்களில் இந்த வேலையை டாஸ்மாக் ஊழியர்களே செய்தது தான் வேடிக்கை. போலீசாரின் 'மாமூல்' ரோந்தால் இந்த விற்பனை பாதிக்கப்படவில்லை.
இம் மாதம் 23ம் தேதி தைப் பூசத்தையொட்டியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.