அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு-சீறிப் பாய்ந்த காளைகள்
மதுரை: உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹரின் நேரடிக் கண்காணிப்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த காளைகளை வாலிபர்கள் அடக்க பரிசுகளை அள்ளிச் சென்றனர்.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை 15ம் தேதியன்று உச்சநீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் நீக்கியது. இதையடுத்து நேற்று அலங்காநல்லூர் அருகே உள்ள பாலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு வெகு விமரிசையாக நடந்தது.
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. தடுப்புக் கட்டைகள் கட்டி, காளைகளும், காளைகளை அடக்கும் வீரர்களும் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
காளைகளுக்கும், வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. காளைகளை அடக்கும் வீரர்களுக்கு சீருடைகளும் கொடுக்கப்பட்டிருந்தன.
வழக்கமான உற்சாகத்துடன் நடந்த ஜல்லிக்கட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரின் நிலை மட்டும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. காயமடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சையும், பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
இன்று அலங்காநல்லூரில் ..
இந்த நிலையில் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடந்தது. காலை 11.30 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது.
பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த 300க்கும் மேற்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டன.
உச்சநீதிமன்றத்தின் நிபந்தனைகளின்படி காளைகளை அடக்க விரும்பிய வீரர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டிருந்தன. மேலும், ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்பு வீரர்களுக்கும், காளைகளுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
அதன் பின்னர் போட்டி தொடங்கியது. வாடி வாசல் வழியாக முதலில் கோவில் காளை திறந்து விடப்பட்டது. அந்தக் காளையை யாரும் பிடிக்கவில்லை. இதையடுத்து பிற காளைகள் திறந்து விடப்பட்டன.
வாடி வாசல் வழியாக சீறி வந்த காளைகளை வீரர்கள் திமிறிச் சென்று அடக்கினர். பல காளைகள் வீரர்களுக்கு கடுக்காய் கொடுத்து சிலிர்த்துச் சென்றன. சில காளைகள் வீரர்களிடம் சிக்கி தோற்றன.
காளைகளை அடக்கியவர்களுக்கு பல்வேறு வகையான பரிசுகள் கொடுக்கப்பட்டன. பல்வேறு கெடுபிடிகள், நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால் இந்த ஆண்டு முன்பு போல களையுடன் இல்லை ஜல்லிக்கட்டு என்று அலங்காநல்லூர் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ஜல்லிக்கட்டையொட்டி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்ைககள் எடுக்கப்பட்டிருந்தன. அதி நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
மாவட்ட எஸ்.பி. அன்பு தலைமையில் 1500 போலீஸார் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர், புறநகர் மாவட்ட எஸ்.பி. அன்பு உள்ளிட்டோர் நேரடியாக போட்டியை கண்காணித்தனர்.
மாடு பிடி வீரர்களுக்கு நீல நிறத்திலான டிரவுசரும், சட்டையும், தொப்பியும் வழங்கப்பட்டன. அவர்களைத் தவிர வேறு யாரும் உள்ளே இறங்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
தடுப்புக் கட்டைகளும், வேலிகளும் அமைக்கப்பட்டு மாடு பிடி வீரர்களுக்கான பகுதியும், பார்வையாளர் பகுதியும் பிரிக்கப்பட்டிருந்தன.
ஜல்லிக்கட்டைக் காண்பதற்காக அலங்காநல்லூரில் மனிதக் கடல் அலை மோதியது. பல்வேறு வெளிநாட்டினரும் அலங்காநல்லூரில் குவிந்திருந்தனர்.
பல்வேறு பாதுகாப்பு நடவடிக்ைககளும் எடுக்கப்பட்டிருந்தன. மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
பாதுகாப்பு பணியில் 1,500 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.