கட்சியை பலப்படுத்தி வருகிறோம் - கார்த்திக்
தஞ்சாவூர்: நாங்கள் இப்போதைக்கு எங்கள் கட்சியை வலுப்படுத்தும் பணியில் மட்டுமே ஈடுபட்டுள்ளோம். உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது என்று பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் முதலில் ஒரு நடிகன். 2 வருடமாகத்தான் அரசியலில் ஈடுபட்டுள்ளேன்.
இரண்டையும் நான் ஒரு சீராக செயல்படுத்தி வருகிறேன். இது மக்களுக்கு நன்றாக தெரியும்.
தற்போது பார்வர்டு பிளாக் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. பல சமூகத்தினரும் இதற்கு வருகின்றனர். குறிப்பிட்டவர்களுக்கான கட்சி இது இல்லை என்ற நிலையை உருவாக்குகிறோம்.
எனது செயல்பாட்டை பார்த்துத் தான் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவி என்று இரண்டையும் எனக்கு தேசிய நிர்வாகம் வழங்கியுள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இப்படி இரு பதவிகளையும் ஒருவரிடமே கட்சி மேலிடம் ஒப்படைக்கவில்லை. படிப்படியாக கட்சியை பலப்படுத்துகிறோம்.
தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன. இப்போதைக்கு எங்கள் கட்சியை வலுப்படுத்தும் பணியில் மட்டுமே ஈடுபட்டுள்ளோம்.
விஜயகாந்த் கட்சி நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது. புதிய படம் வந்தால் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதும். ஆனால் அந்தப்படம் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து தான் சில நாட்களுக்கு பின்னர் மாற்றங்கள் வரும். அதுபோலத் தான் தேமுதிக புதிய கட்சி. அது எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
விஜயகாந்த், சரத்குமார் கட்சி தொடங்கினாலும், அவரவர்களுக்கு ஒரு பாதை உள்ளது. தேர்தல் நேரத்தில் தான் எதையும் முடிவு செய்ய இயலும்.
அரசு இலவச டிவி, அரிசி வழங்குவது ஒரு விதமான அறிவிப்பு. குஜராத்தில் கூட காங்கிரஸ் கட்சியினர் இதுபோல அறிவித்தனர். இருப்பினும் தோல்வியைத் தான் சந்தித்தனர்.
அரசின் இந்த திட்டங்கள் கவர்ச்சிகரமானது. இதன் மீது மக்களுக்கு ஆர்வம் இருக்கும். நீண்ட நாட்களுக்கு இதன் தாக்கம் இருக்காது. உழைத்து, சம்பாத்தித்து நாமே வாங்கிய பொருள் மீது நமக்கு பற்று அதிகமாகும். இலவசங்கள் மீது பெரிய மரியாதை ஏற்படாது என்றார் கார்த்திக்.












Click it and Unblock the Notifications