பெனாசிர் கொலை வழக்கில் சிறுவன் கைது!
இஸ்லாமாபாத்:முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவனை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக அல் ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகம் உள்ள வட மேற்கு எல்லைப்புற மாகாமத்தின், தேரா இஸ்மாயில் கான் என்ற நகரில் வைத்து இந்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளானாம். இவனது பெயர் அய்திஜாஸ் ஷா என்றும் அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
ஷாவின் சொந்த ஊர் கராச்சி ஆகும். தலிபான் அமைப்பின் தலைவரான பைதுல்லா மசூத், பெனாசிரைக் கொல்ல ராவல்பிண்டிக்கு அனுப்பிய மனித வெண்டுகள் அடங்கிய தற்கொலைப் படையில் ஷா இடம் பெற்றிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளதாக அல் ஜசீரா கூறுகிறது.
பெனாசிர் கொலை தொடர்பாக போலீஸாரிடம் ஷா அளித்துள்ள வாக்குமூலத்தில், தற்கொலைப் படையில் இடம் பெற்றிருந்த அக்ரம் மற்றும் பிலால் ஆகிய இருவரும் பூட்டோவைக் கொல்வது எனவும், ஒருவேளை அவர்கள் அதில் தோல்வி அடைந்தால் மற்ற 3 பேரும் சேர்ந்து பூட்டோவைக் கொல்வது எனவும் திட்டமிடப்பட்டிருந்தது.
திட்டமிட்டபடி பிலால் பூட்டோவை சுட்டுக் கொன்றார். பின்னர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தார் என்று கூறியுள்ளாராம் ஷா.
தற்கொலைப் படையில் இடம் பெற்றிருந்த மற்ற 2 பேர் குறித்த தகவல் தெரியவில்லை. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. பெனாசிர் கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து ஷா, வட மேற்கு எல்லைப்புற மாகாணத்திற்குத் திரும்பி விட்டான்.
அதன் பின்னர் கராச்சியில் உள்ள ஒரு வெளிநாட்டு தூதரகம் மீதான தற்கொலைப் படைத் தாக்குதல் பணி அவனுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில்தான் அவனை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அல் ஜசீராவின் செய்தியை பாகிஸ்தான் உள்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவேத் இக்பால் சீமா உறுதிப்படுத்தவில்லை. தேரா இஸ்மாயில் கான் நகரில் யாரையும் கைது செய்ததாக எங்களுக்குத் தகவல் இல்லை. மேலும், பெனாசிர் கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏதும் ஏற்பட்டிருப்பதாகவும் எங்களுக்குத் தகவல் இல்லை என்றார் அவர்.
பெனாசிர் கொலை வழக்கில் சிறுவன் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தியால் பாகிஸ்தானில் பரபரப்பு நிலவுகிறது.