குஜராத் தேர்தல் முடிவால் சோனியாவுக்கு உடல் நல பாதிப்பு: மோடி
மும்பை: குஜராத் பொதுத் தேர்தலில் ஏற்பட்ட படு தோல்வியால்தான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மோடியின் இந்த விமர்சனம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை சிவாஜி பூங்காவில், மகாராஷ்டிர மாநில பாஜக சார்பில் மோடிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய மோடி, சோனியாவை கடுமையாகத் தாக்கினார். மோடி பேசுகையில், குஜராத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர்தான் சோனியா காந்தியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் நல்ல உடல் நலம் பெற வேண்டும் என்று ஒட்டுமொத்த குஜராத் மக்களும் பிரார்த்தித்துக் கொண்டனர். இப்போது அவர் நலம் பெற்றுள்ளார்.
என்னை மரண வியாபாரி என்று அழைத்து விமர்சனம் செய்ததே காங்கிரஸ் கட்சிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது. தேர்தலில் தோல்வியையும் கொடுத்தது.
என் மீது அவர்கள் எறிந்த அம்புகள் அனைத்தும் பூக்களாய் மாறி விட்டன. கற்களை அவர்கள் என் மீது எறிந்தபோது அதை நான் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொண்டேன்.
என்னை ஆதரித்ததற்காக குஜராத் மக்கள் மீது கோபமாக உள்ளது காங்கிரஸ். இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார் மோடி.
சோனியாவின் உடல் நிலை குறித்து மோடி பேசியதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், மோடி இன்னும் மாறவில்லை, திருந்தவில்லை. அவரிடம் அதிகார போதை அதிகரித்து விட்டது. அதனால்தான் இப்படிப் பேசியுள்ளார் என்றார்.