12 ராமேஸ்வரம் மீனவர்கள் கடத்தல்-இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமேஸ்வரம்: கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர். இதனால் ராமேஸ்வரத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம், ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி எல்லை தாண்டியதாக கைது செய்வதும், அப்பாவி மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இப்படிப்பட்ட சம்பவங்களின்போது மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுப்பதும், அதற்கு மத்திய அரசு வழக்கம் போல மெளனச் சாமியாராக இருப்பதும் தொடர் கதையாகி வருகிறது.
இலங்கை கடற்படையினரின் வெறித் தாக்குதலில் சிக்கி தமிழக மீனவர்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இதுவரை மத்திய அரசு ஒரு துரும்பைக் கூட நகர்த்தாமல் படு அலட்சியமாக இருந்து வருகிறது.
இலங்கையை கடுமையாக கண்டித்து ஒரு வார்த்தை கூட இதுவரை மத்திய அரசு வெளியிட்டதில்லை. மேலும், இந்திய கடற்படையும், கடலோரக் காவல் படையும் இதுவரை ஒருமுறை கூட இலங்கைத் தாக்குதலிலிருந்து ஒரு தமிழக மீனவரைக் கூட காப்பாற்றியதாக வரலாறு இல்லை.
இந்த நிலையில், ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் 3 படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடித்துள்ளதாக கூறி 12 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நாட்டு எல்லை தாண்டி மீன் பிடித்ததற்காக அவர்கள் 12 பேரையும் 15 நாட்கள் சிறைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
2 வாரங்களுக்கு முன்னர்தான் சேகர் என்ற மீனவர் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி படுகாயப்படுத்தினர்.
அந்தப் பரபரப்பிலிருந்து மீள்வதற்குள் 12 பேரைக் கடத்திச் சென்றுள்ளது இலங்கை கடற்படை.
இதனால் ராமேஸ்வரம் பகுதியில் மீனவர்களிடையே பெரும் பதட்டமும், கோபமும் காணப்படுகிறது.