விடுதலைப் புலிகள் ஊடுருவலால் தமிழகத்திற்கு பேராபத்து: ஜெயலலிதா
சென்னை: ஊடுருவி வரும் விடுதலைப் புலிகளால் தமிழகத்திற்கு பேராபத்து காத்திருக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
விடுதலைப் புலிகளின் ஊடுருவல் காரணமாக அவர்களுக்குத் தேவையான ஆயுத தளவாடங்களையும், உணவுப் பொருட்களையும், கள்ளத்தோணி மூலம் மீண்டும் இலங்கைக்கு கடத்தி செல்கிற செயல்கள் சர்வ சாதாரணமாக தமிழகத்தில் நிகழ்ந்து வருகின்றன.
விடுதலைப் புலிகள் மூலம் தமிழ்நாட்டிற்கு மட்டும் அல்ல, இந்தியாவிற்கே பேராபத்து காத்திருக்கிறது என நான் பல முறை எடுத்துக் கூறினேன். ஆனால் அதை யாரும் கண்டு கொள்ளவே இல்லை.
வெடிகுண்டு செய்ய பயன்படும் சைக்கிள் பால்ரஸ் குண்டுகளை 17 பேர் கடத்தியதாகவும், தமிழக மீனவர்களிடமிருந்து இயந்திர படகுகளை கடத்திச் சென்றதாகவும், ஏதோ ஒரு வழக்கில் விடுதலைப் புலிகளை கியூ பிரிவு போலீசார் தினமும் கைது செய்து வருகின்றனர்.
தற்போது கூட இலங்கைத் தமிழ் மாகாண முன்னாள் முதல்வர் வரதராஜ பெருமாளை கொல்ல திட்டமிட்ட சதிச் செயல்களில் ஈடுபட்ட 7 விடுதலைப் புலிகளை கைது செய்துள்ளனர்.
உலகத்தில் இயங்கி வருகிற பல்வேறு பயங்கரவாத இயக்கங்களில் மிகக் கொடூரமான, ஆபத்தான தீவிரவாத இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம் தான் என்றும், இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவி இருப்பதாகவும் அமெரிக்க உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.
விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டில் பரவலாக ஊடுருவ ஆரம்பித்து விட்டனர். இதன் காரணமாக அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் அபாயம் நிறைந்த காடாக மாறி விடுமோ என்கிற கவலையில் தமிழக மக்கள் ஆழ்ந்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு வன்முறை காடாக மாறுவதற்கு உரிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. ஆகவே இந்த அரசை மத்திய அரசு உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications