மலேசிய தமிழர்களுக்கு தாக்கரே அட்வைஸ்!
மும்பை: வாழுகிற நாட்டின் அரசியல் சட்டத்திற்கு விசுவாசமான முறையில் இந்தியர்கள், குறிப்பாக மலேசிய இந்தியர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.
சிவசேனாவின் இதழான சாம்னாவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மலேசியாவில் வசிக்கும் இந்தியர்கள், சமூக, பொருளாதார பாகுபாட்டைக் கண்டித்து போராட்டம் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.
எங்கு வாழுகிறீர்களோ அந்த நாட்டுக்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும். ரோமில் இருந்தால் ரோமானியனாக இரு என்ற பழமொழி மலேசிய இந்தியர்களுக்கும் பொருந்தும்.
மலேசிய இந்தியர்கள் போராட்டம் நடத்துவது சரியல்ல. இது இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானில் பிறந்த முஸ்லீம்களுக்கும் பொருந்தும்.
மும்பையில் வெளிமாநிலத்தவர் அதிக அளவில் குவிவதைத் தடுக்க பெர்மிட் முறையைக் கொண்டு வர வேண்டும்.
இந்தியாவைச் சேர்ந்தவர்கள் நாட்டின் எந்த மூலைக்கும் போவதற்கும், குடியேறுவதற்கும் உரிமை உள்ளது. அரசியல் சட்டம் அதற்கு இடம் கொடுத்துள்ளது என்பதை நான் அறிவேன்.
இருந்தாலும், உள்ளூர் மக்களுக்கு எந்தவித இடையூறும் கொடுக்கக் கூடாது என்று அதே அரசியல் சட்டம்தான் கூறுகிறது. எனவே மும்பையில் வசிப்பதற்கு பெர்மிட் முறையைக் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார் தாக்கரே.