இந்தி, மலையாளம், கன்னடத்தில் நுழையும் ராஜ் டிவி
சென்னை: ராஜ் டிவி குழுமத்திலிருந்து 3வது புதிய சானலாக ராஜ் மியூசிக் நாளை பிறக்கிறது. மேலும் கன்னடம், மலையாளம், இந்தியிலும் மியூசிக் சேனல்களை ராஜ் தொடங்கவுள்ளது.
சன் டிவியைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட தமிழின் 2வது தனியார் தொலைக்காட்சியான ராஜ் டிவிக்கு தற்போது தமிழில் ராஜ் டிவி மற்றும் ராஜ் டிஜிட்டல் பிளஸ் என இரு சானல்கள் உள்ளன.
இந்த நிலையில் 3வது சானலாக ராஜ் மியூசிக் என்ற இசை சானலை நாளை முதல் ராஜ் டிவி குழுமம் தொடங்குகிறது. இதுகுறித்து ராஜ் டிவி குழும தலைவர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ராஜ் மியூசிக் சானல் 24 மணி நேர இசை மற்றும் பொழுது போக்கு சேனலாகும்.
இசைப் பிரியர்களுக்காக இது தொடங்கப்படுகிறது. இளைஞர்களின் திறமைகள் முழு அளவில் வெளிப்படும் வகையில் இதில் நிகழ்ச்சிகள் அமையும்.
இந்த சேனல் மூலமாக இளம் பாடகர்களையும் நிறைய அறிமுகப்படுத்தவுள்ளோம். அவர்களுக்கான வாய்ப்புகளும் உருவாக்கிக் கொடுக்கப்படும்.
கிராமிய இசைக் கலைஞர்களுக்கும் வாய்ப்புகள் அளிக்கப்படவுள்ளது.
கிராமபோன் என்ற இசை நிகழ்ச்சி, முதியோர்களுக்கானது. தங்களது அந்த நாளைய அனுபவங்களை முதியோர்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் நேயர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள்.
இதுதவிர மல்லிகை என்ற நிகழ்ச்சியும் உள்ளது. இதன் மூலம் சாதனைப் பெண்கள் தங்களது சாதனை அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். இந்த சேனலில் 5 மணி நேர நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பாக இருக்கும்.
ஏப்ரல் மாதத்தில் இந்த சானல் கன்னடத்திலும், ஜூன் மாதத்தில் மலையாளம் மற்றும் தெலுங்கிலும், நவம்பர் மாதம் இந்தியிலும் தொடங்கப்படும் என்றார் அவர்.
இதன்மூலம் இந்தி மொழியில் டிவி தொடங்கும் முதல் தமிழக தொலைக்காட்சி என்ற பெருமையை ராஜ் டிவி பெறவுள்ளது.
தமிழ் தவிர தெலுங்கில் ஏற்கனவே ராஜ் விஸ்ஸா என்ற சானலையும் ராஜ் டிவி குழுமம் நடத்துகிறது என்பது நினைவிருக்கலாம். அத்தோடு இசை சேனலையும் தொடங்குகிறது.
கலைஞர் டிவியை நடத்த முதலில் ராஜ் டிவியிடம் தான் பொறுப்பு ஒப்படைக்கப்பட இருந்தது. ஆனால், கடைசியில் ராஜை கழற்றிவிட்டு விட்டு திமுக தரப்பே கலைஞர் டிவியை ஆரம்பித்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
சேனல் நடத்த வாய்ப்பு கிடைக்கும் என நம்பி திமுகவில் போய் சேர்ந்தார் ராஜ் நிறுவன அதிபர்களில் ஒருவர் என்பது நினைவுகூறத்தக்கது.