சட்டசபையில் அதிமுக வெளிநடப்பு- ஆளுநர் உரை புறக்கணிப்பு

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் பர்னாலா தனது உரையை வாசிக்க எழுந்த நிலையில் அதிமுக வெளிநடப்பு செய்தது. தமிழகத்தில் எல்டிடிஈ நடமாட்டம் அதிகரித்துவிட்டதாகவும், புலிகளுக்கு திமுக அரசு ஆதரவு தந்து வருவதாகவும், இதனால் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் கோஷமிட்டபடி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இன்று காலை அவை கூடியதும், இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உரையாற்ற வந்தார். அவரை முதல்வர் கருணாநிதியும், சபாநாயகர் ஆவுடையப்பனும் வரவேற்று அழைத்து வந்தனர்.
ஆளுநர் தனது இருக்கையில் அமர்ந்த மறு வினாடியே அதிமுக சட்டமன்ற துணைத் தலைவர் (ஜெயலலிதா கையெழுத்து மட்டும் போட்டுவிட்டுப் போய்விட்டார், அவைக்குள் வரவில்லை) பன்னீர்செல்வம் எழுந்து ஒரு அறிக்கையை வேக வேகமாக படித்தார்.
அதில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. விடுதலைப் புலிகளுக்கு திமுக அரசு ஆதரவு தந்து வருகிறது. இதனால் புலிகள் ஊடுருவல் அதிகரித்துவிட்டது. புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் கவிதை எழுதியது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் தலைவருக்கு முதல்வர் இரங்கல் பா எழுதியது சட்ட விரோதமான செயலாகும். கருணாநிதியின் இந்தச் செயலால் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு திறம்பட கையாளப்பட்டது. இப்போது தமிழகம் தீவிரவாதிகளின் புகலிடமாகிவிட்டது. புலிகளின் ஊடுருவல் அதிகரித்துவிட்டது. தமிழகம் புலிகளின் ஆயுத கிடங்காகிவிட்டது என்று கூறிய பன்னீர்செல்வம் தனது கட்சியினருடன் வெளிநடப்பு செய்தார்.
வழக்கமாக அதிமுக எவ்வழியோ அவ் வழியே செயல்படும் மதிமுகவினர் சட்டசபையில் அமர்ந்திருந்தனர். வழக்கமாக அதிமுகவினரைத் தொடர்ந்து வெளிநடப்பு செய்யும் அவர்கள் இன்று வெளியேறவில்லை.












Click it and Unblock the Notifications