இந்திய சாப்ட்வேர் துறை-10.73 பில்லியனை நோக்கி..
டெல்லி:2011ம் ஆண்டில் இந்திய சாப்ட்வேர் சந்தையின் உற்பத்தி மதிப்பு 10.73 பில்லியன் டாலராக உயரும் என உலகின் மிகப் பிரபலமான பொருளாதார ஆய்வு நிறுவனமான கார்ட்னர் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் அரூப் ராய் கூறுகையில், பொருளாதார வளர்ச்சி, சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் அபரிமிதமான வளர்ச்சி, அரசுத் திட்டங்கள், வாடிக்கையாளர்கள் உயர்வு ஆகியவற்றின் காரணமாக தகவல் தொழில்நுட்பத் துறை அபரிமிதமான வளர்ச்சியை சந்தித்து வருகிறது.
வளர்ந்து வரும் வாய்ப்புகளைப் பிடிப்பதற்காக ஒவ்வொரு ஐடி நிறுவனமும் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. பல்வேறு மாற்றங்களுக்கு அவை உட்பட்டு வருகின்றன.
ஐடி துறையில், கன்சல்டிங், ஐடி நிர்வாகம், வர்த்தக நிர்வாகம் உள்ளிட்டவை நல்ல வளர்ச்சியைப் பெறும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதன் வளர்ச்சி முறையே 28.1, 23.8, 27.1 சதவீதமாக இருக்கும்.
கன்சல்டிங் பிரிவில், 2005ம் ஆண்டை விட 2006ம் ஆண்டில் 30.1 சதவீத வளர்ச்சியைக் கண்டு, அதன் சந்தை மதிப்பு 340 மில்லியன் டாலராக இருந்தது.
ஐடி நிர்வாகப் பிரிவின் வருவாய் 27.3 சதவீத வளர்ச்சியைக் கண்டு 2006ம் ஆண்டில் அதன் மதிப்பு 549 மில்லியன் டாலராக இருந்தது.
கடந்த ஆண்டு ஐடி சேவை விற்பனைப் பிரிவில், ஐபிஎம், டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (டிசஎஸ்) மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களின் ஒட்டுமொத்த பங்களிப்பு 26.1 சதவீதமாக இருந்தது.
2006ம் ஆண்டு டாடா கன்சல்டன்சி சர்வீஸை முந்தி, ஐபிஎம் முதலிடத்தைப் பிடித்தது. இதன் சந்தை பங்கு 11.2 சதவீதமாகும். டிசிஎஸ் 10.9 சதவீதத்துடன் 2வது இடத்திலும், விப்ரோ 4.1 சதவீதத்துடன் 3வது இடத்திலும் இருந்என்று ராய் தெரிவித்தார்.
கார்ட்னர் நிறுவனம், உலகின் முன்னணி ஐடி ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.