மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டம்-உச்ச நீதிமன்றத்தில் ஜெ மனு
டெல்லி: ராமர் பாலத்திற்கு சேதம் இல்லாமல் மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மனுத் தாக்கல் செய்துள்ளார்.
ஏற்கனவே இதே போன்ற மனுவை ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியும் தாக்கல் செய்துள்ளார். அதன் மீதான விசாரணை நடந்து வரும் நிலையில் ஜெயலலிதாவும் ஒரு வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் ஜெயலலிதா கூறியுள்ளதாவது:
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ராமர் பாலம் உள்ளது. ஆதம் பாலம் என்றாலும் அது ராமர் பாலம்தான். இந்த பாலத்திற்கான ஆதாரங்கள் தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள ஆவணங்களிலும், பிரிட்டிஷ் ஆவணங்களிலும் மற்றும் வேத, இலக்கியங்களிலும் சான்றுகள் உள்ளன.
ராமர் பாலம் மிகவும் தொன்மை வாய்ந்தது ஆகும். இந்த பாலம், இந்துக்களின் புனித சின்னமாகவும் உள்ளது.
இந்தப் பாலத்தை பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும். ஆனால், சேது சமுத்திர திட்டத்தினால் இந்த பாலத்திற்கு சேதம் ஏற்படும். ஆகவே, பாலத்தை இடிக்காமல் மாற்றப் பாதையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும்.
ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும். அதை உலக புராதன சின்னமாகவும் போற்ற வேண்டும். மேலும், சுற்றுச் சூழலையும் பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு வரும் 28ம் தேதி விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications