தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்
தமிழக சட்டசபை கூட்டத் தொடரை துவக்கி வைத்து ஆளுநர் பர்னாலா உரையாற்றுகையில்,
தமிழக அரசின் புதிய தொழில் கொள்கை மூலமாக ஏராளமான தனியார் துறையினர் இங்கு தொழில்களை துவக்கி வருகின்றன. இந்த ஆட்சி பொறுப்புக்கு வந்த பின் இதுவரை 12 மிகப் பெரிய தொழில் நிறுவனங்களுடன் தொழிற்சாலைகள் துவங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மோடராலோ, டெல், சாம்சங், ரெனால்ட்-நிஸான் உள்ளிட்ட இந்த நிறுவனங்கள் தமிழகத்தில் ரூ. 15,083 கோடி அளவுக்கு முதலீடுகள் செய்து தொழிற்சாலைகளை தொடங்கவுள்ளன. இதில் 4 நிறுவனங்கள் உற்பத்தியையும் துவக்கிவிட்டன.
இந்த நிறுவனங்கள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 1.37 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஹூண்டாய் நிறுவனம் தனது உற்பத்தியை வருடத்துக்கு 6.3 லட்சம் கார்களாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ. 4,000 கோடியை தமிழகத்தில் முதலீடு செய்யவுள்ளது.
அதே போல போர்ட் நிறுவனமும் தனது உற்பத்தியை மேலும் 2 லட்சம் கார்களாக உயர்த்த திட்டமிட்டுள்ள அதற்காக ரூ. 1,800 கோடியை முதலீடு செய்யவுள்ளது. தமிழகத்தில் தொழில் நடத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்திலேயே தொழிலை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது மாநிலத்துக்கு கிடைத்த பெருமையாகும்.
பெரிய நிறுவனங்கள் மட்டுமல்லாமல் சிறு தொழில்களுக்கும் ஊக்கம் அளிக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்தத் துறைக்கு மேலும் உதவும் வகையில் விரைவில் புதிய சிறு தொழில் கொள்கை வெளியிடப்படும். விவசாயம் சார்ந்த சிறு தொழில்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்படவுள்ளன என்று கூறியுள்ளார் பர்னாலா.