போலி நில ஆவண மோசடி: 4 பேர் கைது
ஈரோடு: ஈரோடு அருகே போலி நில ஆவண மோசடி தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சிவகிரி நல்லசெல்லி பாளையத்தை சேர்ந்த செந்தில்குமாருக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தின் பேரில் செல்வக்குமார் என்பவர் போலி ஆவணம் தயார் செய்து மங்களப்பட்டி கனரா வங்கியில் ரூ.15 லட்சம் கடன் பெற்றார்.
இது போல் மேலும் பலரும் போலி ஆவணங்களைக் காட்டி பெரும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் சிலர் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் காவல்துறைக்கு உத்தரவிட்டார். போலீசார் விசாரணை நடத்தியதில் இது போன்று சுமார் 11 பேர் ரூ.84 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
அதை தொடர்ந்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகேசன், அரச்சலூர் இன்ஸ்பெக்டர் தன்ராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
அவர்கள் நடத்திய விசாரணையில் மோசடி தொடர்பாக நல்லிசெல்லிபாளையத்தை சேர்ந்த 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதில் நல்லிசெல்லிபாளையத்தை சேர்ந்த அண்ணாமலை, பத்திர அலுவலகத்தில் ஆவண காப்பக எழுத்தாளராக பணிபுரியும் கோபால கிருஷ்ணன், தர்மர், பொன்னப்ப நாடார் ஆகியோர் கைது
செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.