சர்ச்சை சாமியார் பழனிச்சாமிக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை: பெண்களிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக சமீபத்தில் சர்ச்சையில் சிக்கி கைதான சென்னை மடிப்பாக்கம் சாமியார் பழனிச்சாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
சென்னை மடிப்பாக்கம் பகுதியில், ஆசிரமம் அமைத்து மதுரை வீரன் கோவிலை நடத்தி வந்தவர் பழனிச்சாமி. இவர் சமீபத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கினார்.
ஹோமியோபதி டாக்டர் திவ்யா என்பவரை 3வது கல்யாணம் செய்து கொண்டதாகவும், தனது ஆசிரமத்திற்கு குறி கேட்க வருகிறவர்களிடம் முறைகேடாக நடந்து கொண்டதாகவும் கூறி பழனிச்சாமி மீது அவரது முதல் மனைவி சந்திரா மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதேபோல தனது மகளை கடத்திச் சென்று விட்டதாக பழனிச்சாமி மீது திவ்யாவின் தந்தையும் முகப்பேர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து தலைமறைவான பழனிச்சாமியும், திவ்யாவும் டெல்லி போய் விட்டனர். பின்னர் திவ்யா மட்டும் சென்னைக்குத் திரும்பினார். ஆனால் பழனிச்சாமியைக் காணவில்லை.
அவரை காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிரபாக்கம் அருகே உள்ள ஒரு கோவிலில் வைத்து கடந்த டிசம்பர் 23ம் தேதி போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து ஜாமீன் கோரி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். இதை விசாரித்த நீதிபதி சுதந்திரம் இன்று பழனிச்சாமிக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.
அதன்படி ஆந்திர மாநிலம் சித்தூர் காவல் நிலையத்தில் தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என பழனிச்சாமிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.