வாகனங்கள் அதிகரிப்பால் மூச்சுத் திணறும் பெங்களூர்
பெங்களூர்: வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்ட பெங்களூரில் க்ரீன் ஹவுஸ் கேஸஸ் எனப்படும் சுற்றுச்சூழலை பெருமளவில் பாதிக்கும் வாயுக்கள் வெளியேறுவது கற்பனைக்கு எட்டாத அளவுக்கு அதிகரித்துவிட்டது தெரியவந்துள்ளது.
என்சென் குளோபல் சொல்யூசன்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து கர்நாடக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் இது உறுதியாகியுள்ளது.
கடந்த 10 வருடத்தில் பெங்களூரில் வாகனங்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துவிட்டது. இதனால் கார்பன் மோனாக்ஸைட், கார்பன் டை ஆக்ஸைட் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கும் உடல் நலத்துக்கும் பெரும் கேடு விளைவிக்கும் வாயுவின் அடத்தில் பெருமளவு அதிகரித்துள்ளது.
இதற்கு இரண்டு சக்கர வாகனங்களும், டீசலில் இயங்கும் கன ரக வாகனங்களுமே மிக முக்கிய காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இது தவிர மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைட் உள்ளிட்ட விஷ வாயுக்களின் அளவும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
பெங்களூரில் மிக மோசமான சாலைகள், குறுகலான சாலைகள் ஆகியவற்றால் 2,3வது கியர்களிலேயே வாகனங்களை ஓட்டும் நிலை உள்ளது தான் இந்த வாயுக்கள் அதிக அளவில் உற்பத்தியாவதற்கபக் காரணம் என என்சென் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் உமா ராஜரத்தினம் கூறியுள்ளார்.
இப்போதே இந்த வாயுக்களின் அடர்த்தி பெங்களூரில் அபாயகரமான அளவைத் தொட்டுவிட்டது. இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த 10 ஆண்டுகளில் இதன் அளவு இரு மடங்காகும் என்றார் உமா.
ஒரு காலத்தில் மரங்கள் அடர்ந்த, பூங்காக்கள் நிறைந்த க்ரீன் சிட்டியாக இருந்த பெங்களூர் இன்று க்ரீன் ஹவுஸ் கேஸஸ் எனப்படும் கொடிய வாயுக்களை உற்பத்தி செய்வதில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.