சட்டசபையில் கள்ளத் தோணி குறித்து காரசார விவாதம்
சென்னை: கள்ளத் தோணியில் (வைகோ) சென்றவர்கள் குறித்து சட்டசபையில் காரசாரமாக விவாதம் நடந்தது.
சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அதிமுக எம்எல்ஏ கலைராஜன் பேசுகையில்,
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை எப்படி இருக்கிறது என்பதை அமெரிக்க நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ராஜிவ் உயிருக்கு ஆபத்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் உயிருக்கு ஆபத்து என்று கூறிய அந்நிறுவனம் தான், தமிழகத்தில் விடுதலைப் புலிகள் ஊடுருவல் நடந்துள்ளது என்றும் கூறியுள்ளது.
புலிகளால் நாட்டிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று புரட்சித் தலைவி ஜெயலலிதா கூறியுள்ளார். அரசு என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை.
மழை, வெள்ளத்தால் சென்னை மாநகரம் பாதிக்கப்பட்டிருந்தபோது, அதை பார்வையிடுவதற்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் வரவில்லை. அவர் கேரளாவில் இருந்தார் என்றார்.
இதையடுத்து அதிமுக-திமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பேசிய அமைச்சர் ஆற்காடு வீராசாமி, நெல்லை மாநாட்டை முடித்த பிறகு ஒரு நாள் ஓய்வெடுப்பதற்காக அமைச்சர் ஸ்டாலின் கேரளா சென்றார். இதற்கிடையே டெல்லியில் இருந்து முதல்வர் சென்னை திரும்பியதும் திருவள்ளூர், கடலூர் என்று மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். ஸ்டாலினும், தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களை பார்வையிட்டார் என்றார்.
தொடர்ந்து கலைராஜன் பேசுகையில், காஸ் விலை உயர்த்தப்பட்டதைக் கண்டித்து டீ கடை நடத்துபவர்கள் சமீபத்தில் பேரணி நடத்தினர். ஏழை, எளிய மக்களுக்கு குறைந்தபட்சம் குடிக்க டீயும், இருக்க குடிசையும் கிடைக்க வேண்டும். இதைக் கூட நீங்கள் கொடுக்கவில்லை.
அதிமுக ஆட்சியில் சென்னை மெரீனா கடற்கரை மிக சுத்தமாக பராமரிக்கப்பட்டது. இப்போது குப்பை கூளமாகக் காணப்படுகிறது. கலங்கரை விளக்கம் அருகில் ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.
உரிய விசா இல்லாமல் மலேசியா சென்ற தமிழர்கள் பெரிதும் துன்பப்பட்டு வருகின்றனர். அவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அப்போது காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சனம் பேசுகையில், விசா-பாஸ்போர்ட் இல்லாமல் வெளிநாடு சென்றது அவர்களுடைய குற்றம். பாஸ்போர்ட் இல்லாதவர்களுடன் (வைகோ) கூட்டணி வைத்துக் கொண்டதால் நீங்கள் அப்படி பேசுகிறீர்களா என்ற அச்சம் எனக்கு தோன்றுகிறது என்றார்.
செங்கோட்டையன் (அதிமுக): பாஸ்போர்ட் இல்லாமல் செல்ல அனுமதி தந்தவர்களுடன் (திமுக) தான் நீங்கள் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
யசோதா (காங்கிரஸ்): பாஸ்போர்ட் இல்லாமல் செல்பவர்களை தடுப்பது மத்திய அரசின் பணி. ஆனால், கள்ளத்தோணியில் செல்பவர்களை எப்படி தடுக்க முடியும்.
யசோதா கூறியதும், மதிமுக உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன் எழுந்து தன்னை பேச அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் கேட்டார். அனுமதி கிடைக்காததால் மதிமுகவைச் சேர்ந்த அனைத்து எம்எல்ஏக்களும் எழுந்து நின்று கூச்சலிட்டனர்.
சபாநாயகர்: கள்ளத்தோணி என்றதும் நீங்கள் ஏன் எழுந்து நிற்கிறீர்கள். கள்ளத் தோணி என்பது உங்களை குறிக்கவில்லை. அமைதியாக உட்காருங்கள் என்றார்.
கலைராஜன்: சென்னை அரசு பொது மருத்துவமனையில் கட்டண வார்டு பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ வசதி கிடைப்பதற்குத் தான் அரசு மருத்துவமனைகள் உள்ளன. ஆனால், அரசு மருத்துவமனைகளே தனியாருக்கு தாரை வார்க்கப்படுமோ என்ற அச்சம் இப்போது எழுந்துள்ளது.
சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம்: அந்த கட்டண பிரிவே, உங்களது ஆட்சியில் தான் கட்டப்பட்டது. இப்படி அடுத்தவர்கள் மீது குற்றம் கூறி பிழைப்பு நடத்த வேண்டாம் என்றார்.












Click it and Unblock the Notifications