இலங்கை கடற்படையினர் அட்டூழியம்-ராமேஸ்வரத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம்
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் கடந்த வாரம் கடலுக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினர், கடல் எல்லையை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 12 பேரையும் கைது செய்து அந்நாட்டு சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தால் மீனவர்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால், ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மீனவர்கள் உண்ணாவிரதப் போராடத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.