தென்காசி குண்டு வெடிப்பைக் கண்டித்து போராட்டம் ஆர்.எஸ்.எஸ்.
தென்காசி: தென்காசி குண்டு வெடிப்பு சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று ஆர்எஸ்எஸ் மாநிலப் பொருளாளர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
தென்காசியில் ஆர்எஸ்எஸ் அலுவலகத்திலும், புதிய பஸ் நிலையத்திலும் நேற்று முன்தினம் இரவு குண்டுகள் வெடித்ததில் ஒருவர் காயமடைந்தார். இதைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் மாநிலப் பொருளாளர் ராஜேந்திரன் தென்காசிக்கு வந்தார்.
ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து முண்ணனி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கடந்த ஆகஸ்ட் மாதம் தென்காசியில் நடந்த கொலை சம்பவத்தில் 6 பேர் பலியானார்கள். இதைத் தொடர்ந்து இந்துக்களை அச்சுறுத்த வேண்டும், பீதி அடைய செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்து உள்ளது.
6 பேர் கொலை சம்பவத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அதில் உள்ளவர்களில் சிலர் கைது செய்யப்படவில்லை. குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தவுடன் நகரின் 4 பகுதிகளிலும் சீல் வைத்து சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரித்திருந்தால் குற்றவாளிகளை கைது செய்திருக்கலாம்.
சென்னையில் இருந்து விசேஷ குழு வருவதாக கூறி சம்பவம் நடந்த ஆர்எஸ்எஸ் அலுவலகத்தின் சாவியை எங்களிடம் தர காவல்துறை மறுக்கிறது. இதனால் நாங்கள் இப்போது தெருவில் இருக்கிறோம்.
இந்த குண்டு வெடிப்பை கண்டித்து பெரிய அளவில் போராட்டம் நடத்த இருக்கிறோம். இந்த சம்பவத்தின் எதிரொலி நாடு முழுவதும் எதிரொலிக்கும்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆர்எஸ்எஸ் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்த கட்டமாக தென்காசி சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த இருப்பது குறித்து ஆலோசிக்க இருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications