திமுக ஆசியுடன் ரேஷன் அரிசிக் கடத்தல்: அதிமுக புகார்
திருச்சி: திமுக அரசின் முழு ஆசியுடன்தான் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் முழு அளவில் நடந்து வருவதாக முன்னாள் அதிமுக அமைச்சரும், ஜெயலலிதா பேரவை செயலாளருமான தளவாய் சுந்தரம் குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சி ஊரக மாவட்ட ஜெயலலிதா பேரவை ஊழியர் கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், திமுகவினர்தான் ரேஷன் அரிசிக் கடத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவேதான் திமுக அரசு அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கண்டிக்க முடியவில்லை. அரிசிக் கடத்தலைத் தடுக்கவும் முடியவில்லை.
தமிழக மக்களின் நலன்களைக் காக்க முதல்வர் கருணாநிதி தவறி விட்டார். 2 ஆண்டுகளை திமுக அரசு முடித்தும் கூட, மக்களுக்காக எந்த நன்மையையும் அது செய்யவில்லை.
மக்களுக்கு நல்லது செய்வதை விட்டு விட்டு, இலவசப் பொருட்களை வாங்குமாறு மக்களை தவறான பாதையில் திருப்பி விட்டு வருகிறது திமுக அரசு என்றார் அவர்.