சென்னை விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை எம்பி
சென்னை: விமானம் மூலம் தமிழகம் வந்த இலங்கையின் தமிழ் ஈழ விடுதலை அமைப்பு கட்சியின் எம்பியான நித்யானந்தம் உதயகுமார் விமான நிலையத்திலேயே தடுக்கப்பட்டு குடும்பத்தினருடன் திருப்பி அனுப்பப்பட்டார்.
இலங்கை தமிழர் கட்சிகளில் முக்கியமான இந்தக் கட்சிக்கு 4 எம்பிக்கள் உள்ளனர். இந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ள நித்யானந்தம் உதயகுமார் எம்பியும் ஆவார்.
இவர் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வியாழக்கிழமை இரவு ஏர்லங்கா விமானத்தில் மனைவி, 3 குழந்தைகளுடன் சென்னை வந்தார்.
ஆனால், விமான நிலையத்தில் இவர்களது ஆவணங்களை சரி பார்த்த குடிமைத்துறை அதிகாரிகள் உதயகுமாருக்கு அனுமதி மறுத்தனர். மனைவி, குழந்தைகள் வேண்டுமானால் சென்னைக்குள் நுழையலாம். உங்களுக்கு அனுமதியில்லை என்று கூறிவிட்டனர்.
இதையடுத்து அவர் தனது குடும்பத்தினருடன் அடுத்த விமானத்திலேயே கொழும்பு திரும்பிவிட்டார்.
நித்தியானந்தம் உதயகுமாருக்கு விடுதலைப் புலிகளடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது குறித்து தமிழ் ஈழ விடுதலை அமைப்பு கட்சியின் எம்பியும் முக்கிய தலைவருமான சிவாசிலிங்கம் கூறுகையில்,
இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் எம்பியான உதயகுமார் குடும்பத்துடன் தமிழகத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது எதிர்பாராதது. எங்கள் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே இந்தியாவிற்கு ஆதரவாக உள்ளது குறிப்பிடத்தக்கது என்றார்.