காவல் நிலையத்தில் வக்கீலுக்கு அடி-உதை
கரூர்: கரூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞருக்கு சரமாரியாக அடி, உதை விழுந்தது.
கரூரில் வக்கீலாக பணியாற்றி வருபவர் கரிகாலன். இவரது நண்பர் மெட்ரோ பிரபு. இவர் அதிமுக முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் ஆவார்.
மெட்ரோ பிரபு வைத்துள்ள செல்போன் கடையில் ரூ. 3.000 மதிப்புள்ள செல்போன் ரீசார்ஜ் கூப்பன்கள் மற்றும் ரூ. 2,000 ரொக்கம் ஆகியவை நேற்று முன் தினம் காணாமல் போயின.
இது சம்பந்தமாக புகார் கொடுக்க கரிகாலனும், மெட்ரோ பிரபுவும் கரூர் காவல் நிலையத்திற்கு நேற்று இரவு சென்றுள்ளனர்.
அப்போது, கரிகாலனை இன்ஸ்பெக்டர் முத்துகருப்பன் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
இந் நிலையில் கரிகாலனை இன்ஸ்பெக்டர் முத்துக்கருப்பன் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கரிகாலன் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தாக்குதலுக்கு உள்ளான கரிகாலன் சார்பில் கரூர் எஸ்.பி. சண்முகவேலிடம் இன்ஸ்பெக்டர் முத்துக்கருப்பன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
கரிகாலன் தாக்கப்பட்டது குறித்து கடும் கண்டணம் தெரிவித்ததோடு, திங்கள்கிழமையன்று பார் கவுன்சில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும் என வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.