சட்டசபையைக் கலக்கிய கச்சத்தீவு!!
சென்னை: தமிழக மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கச்சத்தீவை மீண்டும் திரும்பப் பெற வேண்டும் என சட்டசபையில் இன்று அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்தன.
தமிழக சட்டசபையில் இன்று இலங்கை படையினரால் கடத்தப்பட்டுள்ள 12 ராமேஸ்வரம் மீனவர்கள் குறித்து சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
விவாதத்தின் மீது அதிமுக உறுப்பினர் ஜெயக்குமார் பேசுகையில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருகின்றனர். இதைத் தடுக்க உரிய நடவடிக்ைககள் மேற்கொள்ளப்படவில்லை.
இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை இந்தியா மீண்டும் திரும்பப் பெற வேண்டும் என்றார்.
காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் பேசுகையில், கச்சத்தீவை திரும்பப் பெற மாநில அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். கச்சத்தீவு பகுதியில் இலங்கை அரசு கண்ணிவெடிகளை கடலில் மிதக்க விட்டுள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது. இவற்றை அகற்ற மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றார்.
பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், கச்சத்தீவை மீட்பது மட்டுமே தமிழக மீனவர்களுக்கு நலம் பயக்கும் நடவடிக்கையாக இருக்கும். மேலும் கடல் எல்லைப் பகுதியை மீனவர்கள் எளிதில் அறிந்து கொள்ள அங்கு சிவப்பு விளக்குடன் கூடிய மிதவைகளை மிதக்க விட வேண்டும் என்றார்.
மேலும் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்களும் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கோரினர்.
விவாதத்திற்குப் பதிலளித்து அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசுகையில், தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் மீன் பிடிக்கும் உரிமையை மத்திய அரசிடம் கேட்டுப் பெறுவோம். கடத்தப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை மீட்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications