ராமேஸ்வரம் கடலில் மூழ்கி பெங்களூரைச் சேர்ந்தவர் பலி
ராமேஸ்வரம்: பெங்களூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ராமேஸ்வரத்தில் நாட்டுப் படகில் பயணித்தபோது ஆனந்தராஜ் என்பவர் கடலில் தவறி விழுந்து பலியானார்.
பெங்களூரைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்திருந்தார். ராமநாதசுவாமி கோவிலில் தரிசனத்தை முடித்த அவர்கள் கடலில் படகில் பயணிக்க விரும்பினர்.
ஆனால் சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் கடலில் பயணிக்க தடை உள்ளது. இருப்பினும் அங்கிருந்த மீனவர்கள் சிலரின் உதவியை நாடிய ஆனந்தராஜ் குடும்பத்தினர் பணம் கொடுத்து நாட்டுப் படகு ஒன்றில் கடலுக்குள் சென்றனர்.
சிறிது தூரம் சென்ற பின்னர் மீண்டும் கரைக்குத் திரும்பினர். அப்போது ஆனந்தராஜ் உற்சாக மிகுதியில் படகின் விளிம்பில் நின்றபடி வந்துள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக அவர் தவறி கடலில் விழுந்தார்.
அவருக்கு நீச்சல் தெரியாது என்பதால் கடலில் மூழ்கிய சில நிமிடங்களிலேயே பிணமானார்.
தங்கள் கண் முன்பாகவே ஆனந்தராஜ் பலியானது அவரது குடும்பத்தினரை கலங்கடித்தது. ஆனந்தராஜ் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக அமைந்தது.