திமுக ராஜ்யசபா எம்.பி. ஆவாரா வைரமுத்து?

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக் காலம் வரும் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது.
ராஜ்யசபா உறுப்பினர்களாக உள்ள மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் (காங்கிரஸ்), சண்முகசுந்தரம் (திமுக) மற்றும் அதிமுகவைச் சேர்ந்த ஜோதி, தங்கத் தமிழ்ச் செல்வன், சையத்கான், சி.பெருமாள் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 9ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து நடக்கவுள்ள ராஜ்யபசா தேர்தலில் தற்போது தமிழக சட்டசபையில் உள்ள கட்சிகளின் பலத்தின் அடிப்படையில் திமுகவுக்கு 3 சீட்களும், அதிமுகவுக்கு 2ம், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சீட்டும் கிடைக்கும்.
திமுக தரப்பில் இந்த முறை முக்குலத்தோர் மற்றும் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சீட் கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜயகாந்த்தும், சரத்குமாரும் தென் மாவட்டங்களில் புகுந்து விளையாடி வருவதால் அப் பகுதியில் பெரும்பான்மையாக உள்ள முக்குலத்தோர் வாக்குகளை கவனத்தில் வைத்து சீட் ஒதுக்கும் திமுக என்கிறார்கள்.
திமுக சார்பில் சிலரது பெயர்களும் அடிபடுகின்றன. அவர்களில் முக்கியமானவர் வைரமுத்து. முதல்வருக்கு மிக நெருக்கமானவர் வைரமுத்து. முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர்.
மேலும், அதே நெல்லை மாநாட்டின் மூலம் திமுகவிற்குள் நுழைந்துள்ள முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியனின் மகளும், அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரியுமான, கல்லூரிப் பேராசிரியை தமிழச்சிக்கும் சீட் கிடைக்கலாம் எனத் தெரிகிறது.
அதேசமயம், சரத்குமாரின் எழுச்சியைச் சரி கட்ட நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் சீட் கிடைக்கக் கூடும் எனத் தெரிகிறது. நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. சிவப்பிரகாசம், அருணகிரி, சேட் பீடி உரிமையாளர் களக்காடு கருணாகரன் ஆகியோர் சீட் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சில முக்கிய திமுக முன்னணியிரும் ராஜ்யசபா சீட்டுக்கு முயற்சிக்க ஆரம்பித்துள்ளனர். இதில் முக்கியமானவர் முன்னாள் அமைச்சர் தங்கவேலு.
இப்படி எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தாலும் மொத்தம் 3 சீட்களே இருப்பதால், யார் யாருக்கு சீட் கிடைக்கும் என்பது திமுகவினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் டான்சி வழக்கில் திமுகவுக்காக வாதாடி ஜெயலலிதா அனுப்பிய குண்டர் படையிடம் அடிவாங்கி விரல்களை இழந்த சண்முகசுந்தரம் மீண்டும் எம்பியாகும் எண்ணத்தில் இருக்கிறார்.
காங்கிரஸைப் பொறுத்தவரை அந்த ஒரு இடத்தை மீண்டும் வாசனே பிடிக்கக் கூடும்.












Click it and Unblock the Notifications