நாங்குநேரியில் போலி பெண் டாக்டர் கைது
நாங்குநேரி: நாங்குநேரி அருகே போலி பெண் டாக்டரை போலீஸார் கைது செய்தனர்.
நாகர்கோவிலை சேர்ந்த என்ஜீனியர் சாமிதாஸ். இவரது மனைவி ஜெயராணி. இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தனது கணவரை பிரிந்து வந்து நாங்குநேரி அருகேயுள்ள மூலக்கரைப்பட்டியில் தனியாக வசித்து வந்தார். அப்போது அவர் அங்கு ஒரு எம்பிபிஎஸ் பயின்ற டாக்டரிடம் கம்பவுண்டராக வேலை பார்த்து வந்தார்.
அப்போது கிடைத்த 'அனுபவத்தை' வைத்து அவரே டாக்டராகி விட்டார். தனது வீட்டில் வைத்து வைத்தியம் பார்க்கத் தொடங்கினார். இதுகுறித்து போலீஸுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து நாங்குநேரி இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, மூலக்கரைப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர்கள் மரிய ஜேஸ் அந்தோணி, அன்னலெட்சுமி மற்றும் போலீசார் மூலக்கரைபட்டி திருவள்ளுவர் தெருவில் அவர் நடத்தி வரும் கிளினிக்கை சோதனை நடத்தினர்.
அங்கு நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற படுக்கை அமைத்திருந்ததும், ஆங்கில மருந்துகள் பயன்படுத்தி சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து ஜெயராணியை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த மருந்துகளையும் கைப்பற்றினர்.